2026 மார்ச் 18, புதன்கிழமை

மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம்: 'இடம் கிடைத்தால் அகற்றிவிடுவோம்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்றுவதற்கென எமக்கு இன்னொரு இடமொன்று கொடுக்கப்படுமானால், எட்டு மாதங்களுக்குள் குப்பை மேட்டை அகற்றிவிடுவோம்' என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல் மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், 'கொழும்பிலுள்ள 25 குப்பை மேடுகளில் ஒன்றுதான் இந்த மீதொட்டமுல்ல குப்பை மேடாகும். மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் தற்போது பூதாகரமாக மாறிவிட்டது.

மீதொட்டமுல்லயில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டமானது, குப்பைகளை அகற்றுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டது. இந்தக் குப்பை மேடு தொடர்ந்து அதே இடத்தில் இருக்குமானால்,  மழைக்காலங்களில் இந்தக் குப்பை களனி கங்கையை சென்றடைகிறது. இதனால், களனி கங்கையை அண்டி வாழும் மக்கள், நோய் தொற்றுக்குள்ளாகும் அபாயம் நிலவுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்திற்கொண்டே, இந்தக் குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் சில உதவ முன்வந்துள்ளன. இருந்த போதிலும், இந்தக் குப்பைகளை அகற்ற எமக்கு பிறிதொரு இடம்மொன்று தேவைப்படுகின்றது.

இதனைக் கேட்டு நாம் பிரதேச நகர சபைக்கு கடிதம் அனுப்பியபோதும், அதற்கான பதிலை வழங்காது இழுத்ததுடித்துக்கொண்டு வருகிறது. இதற்கான இடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கோ வழங்கவோ யாரும் தயாராக இல்லை. எமக்கு இடமொன்று கிடைக்குமானால் 8 மாதங்களுக்குள் இப்பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்ற முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X