2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பார்த்தீனியம் ஒழிப்பில் 400 இளைஞர் யுவதிகள்

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பதற்காக 400 இளைஞர், யுவதிகளைக் கொண்ட பார்த்தீனியம் ஒழிப்பு படையணியொன்று ஞாயிற்றுக்கிழமை (01) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படையணியின் முதலாவது செயலமர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01) புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமைப்புத் தொடர்பாக ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

'படையெடுக்கும் பார்த்தீனியத்துக்கு விடைகொடுப்போம் வாரீர்' என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் கிராமங்களிலிருந்த இளைஞர்; யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 5 மணித்தியாலயங்கள் என்ற அடிப்படையில் 15 நாட்களுக்கு பார்த்தீனியம் அதிகமுள்ள பகுதிகளில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பணிக்காக உலக உணவுத் திட்டத்தின் நிதியிலிருந்து ஒரு மாதகால உலர் உணவு (அரிசி, பருப்பு, எண்ணெய்) வழங்கப்படவுள்ளது.

இந்தியப் படையினர் இலங்கைக்கு வந்தபோது உணவுக்காக அவர்கள் எடுத்து வந்த செம்மறி ஆடுகளுடனும் தானியங்களுடனும் சேர்ந்து வடக்கில் ஊடுருவிய பார்த்தீனியம் இன்று ஓர் ஆக்கிரமிப்புக் களையாக உருவெடுத்துள்ளது.

இந்த அந்நிய ஊடுருவல் இனம் விவசாய உற்பத்தியை மோசமாகப் பாதிக்கச் செய்வதோடு உள்ளூர்ச் சுதேசிய இனத் தாவரங்களையும் அழித்து வருகின்றது. மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமை நோய்களையும் ஏற்படுத்துகின்றது ஆகவே தான் இந்தச் செடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்படி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .