-சுமித்தி தங்கராசா
'யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம்,
யாழில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 9 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 25 பேரும், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் 07 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 06 பேரும், திருடிய குற்றச்சாட்டில் 07 பேரும், வீதி விபத்துக்கு காரணமானவர்கள் 05 பேரும், மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள் 06 பேரும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் 20 பேரும், பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரும், சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்கள் 02 பேரும், பாதுகாப்பு கருதி ஒருவரும், கத்தி வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவரும், களவு பொருட்கள் வைத்திருந்தவர்கள் 02 பேருமாக 92 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்தவாரம் நடைபெற்ற 9 கொள்ளைச் சம்பவங்களில் 8,85,293 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மானிப்பாய், காரைநகர், கந்தர்மடம், இணுவில், கொழும்புத்துறை, குருநகர் போன்ற பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இம்முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிலரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவங்களில் ஏனையவர்களை கைதுசெய்வதற்கான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.