2025 ஜூலை 16, புதன்கிழமை

'சுன்னாகம் குடிநீர் பிரச்சினையில் அரசியல் முறைகேடு'

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையில் ஓர் அரசியல் முறைகேடு நடந்திருக்கின்றது. உண்மையில் அந்த மக்கள் கழிவு ஒயில் பிரச்சினை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமானதொரு தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்தமையை நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்? என ஊடகவியளாளரொருவரால் வினவப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நீதிமன்றம் இங்கு தேவையில்லை என்ற பிரச்சினை எழுப்பிய போதும்,  நீதிமன்றத்தை  உடைத்த வேளையிலும் நாங்கள் நீதிமன்றங்கள் இங்கு அவசியம், மதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தான் முன் வைத்துச் செயற்பட்டோம். சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். 

உண்மையில் இந்தப் பிரச்சினையை நாங்கள் கையிலெடுத்த போது  நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமையில் உண்மைத் தன்மை காணப்படுகிறது. பிரச்சினை தீர்க்கப்படவில்லை என பல குறைகள் கூறப்பட்டன . பின்னர் நாங்கள் குறித்த பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்த போது அவ்வாறு ஒரு பிரச்சினையே இல்லை என்றார்கள். 

பின்னர் அவர்கள் இந்தப் பிரச்சினையைப்  பொறுப்பெடுத்த பின்னரும் பழைய பல்லவியையே பாடுகின்றனர். 

தென்னிலங்கையில் உள்ள பிரபலமான முன்னணி ஐஸ்கிரீம் கம்பனியினுடைய தரகராகச் செயற்படுவதற்கு உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை முடக்கும் நோக்குடன், யாழ்ப்பாணத் தண்ணிரிலே மலக் கழிவு கலந்திருப்பதாகக்  கதையொன்று பரப்பப்பட்டது. 

பிறகு இந்தக் கதையும் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால், இதன் காரணமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பல ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டார்கள். 

அதேபோல  சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையிலும் ஒன்றுக்குப் பின் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதுடன் செயற்பாடுகளும் அவ்வாறே அமைகின்றன. நாங்கள் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுக்கும் போது வேறொரு நிலைப்பாட்டையும், தற்போது வேறொரு நிலைப்பாட்டையும் அவர்கள் கொண்டுள்ளனர். 

அண்மையில் நிலத்தடி நீர் மாசு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை நான் நேரடியாகச் சென்று பாரவையிட்டேன். தற்போதும் அங்குள்ள கிணறுகளில் எண்ணை மிதக்கிறது.  

ஆனால், இதனை மறுத்திருக்கும் வடமாகாண சபையின் நிபுணர் குழு கிணறுகளில் மலக்கழிவுகள் தான் காணப்படுகின்றன என்கிறது.  

இவ்வாறான நிலையில் இதனை ஒரு அரசியல் காரணமன்றி வேறு எவ்வாறு  சொல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X