2025 ஜூலை 16, புதன்கிழமை

'மகன் பற்றிய அறியமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஒரு மகன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றைய மகன் கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார். எனது இரண்டாவது மகன் பற்றிய தகவல்கள் இந்த வருட இறுதிக்குள் எனக்கு கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என சதாசிவம் பூலோகலட்சுமி தெரிவித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த தாயார் ஒருவர் இவ்வாறு கூறினார்.

எனது மூத்த மகன் குமரன் 19 வயதாக இருக்கும் போது, கடந்த 2004ஆம் ஆண்டு சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, இரண்டாவது மகன் 20 வயதாக இருக்கும்போது,கடந்த 2006ஆம் ஆண்ட மே மாதம் 26 ஆம் திகதி புறாப்பொறுக்கி என்னும் இடத்தில் வைத்து கடத்தப்பட்டார்.அவருடன் மேலும் 3 பேர் கடத்தப்பட்டனர். இதுவரையில் மகன் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை.

பழைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகின்ற போதும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த வருட இறுதிக்குள் எனது மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் வெளியிடவேண்டும். இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வேன்.

மைத்திரி அரசாங்கம் மகனைக் கண்டுபிடித்தத் தரவில்லையென தாயார் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்திகளில் நீங்கள் படிப்பீர்கள் என ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அந்த தாயார் கண்ணீர் மல்க கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X