2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'வட மாகாணத்துக்கு தனியான நீரியல் கொள்கை அவசியம்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று, வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வட மாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான மூன்று நாள் ஆய்வரங்கு, யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை (28) ஆரம்பமாகியது.

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"தண்ணீர் இனிமேல் சமூகங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பகைமையை மூட்டிவிடும் எரியெண்ணையாக இருக்கப்போகிறது. அடுத்த உலகப் போருக்கான காரணியாக அமையப்போகிறது என்ற அச்சம் சர்வதேச அளவில் தொற்றிக் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு உலகில் நீருக்கான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சனத்தொகை அதிகரிப்பால் நீருக்கான தேவை அதிகரித்து வருவதோடு, கிடைக்கின்ற நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது.

உலகம் எதிர்நோக்கும் நீர் தொடர்பான நெருக்கடிகளுக்கு எமது வடக்கு மாகாணமும் விலக்காகவில்லை. சனத்தொகை அதிகரிப்பு, விவசாயத் தேவைகள், போருக்குப் பின்னான காலத்தில் அதிகரித்துள்ள கட்டுமானச் செயற்பாடுகள், கைத்தொழில் வளர்ச்சி, போரினால் எமது நீர்தேக்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், மயோசின் சுண்ணாம்புப்பாறையில் உள்ள பலவீனங்கள், கடல்நீரின் ஊடுருவல், அன்றாடம் குவிந்துவரும் மாசுகள், பூகோள வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் என்று எமது நீர்வளமும் பல்வேறு வகையான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.  

எமது நீர்வளம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு சரியான தீர்வுகளைத் கண்டடையாமற் போனால் நாமும் எமது சூழலும் பாரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரும். இதனைக் கருத்திற் கொண்டே வடக்கு மாகாணத்தின் நீர் வளங்களை நிலைத்து நிற்கும் வகையில் மீட்டெடுப்பதற்கான, பாதுகாப்பதற்கான, பங்கிடுவதற்கான, முகாமை செய்வதற்கான ஒரு நீரியல் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் இன்று இங்கு இணைந்திருக்கிறோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X