2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குடாநாட்டு கொள்ளைச் சம்பவங்கள் முதலீடுகளை பின்தள்ளிவிடும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் வடக்கு மக்களின் உற்பத்தி மற்றும் வர்த்தக முயற்சிகளை நீண்ட காலத்திற்கு பின்தள்ளிவிடும் துரதிஷ்ட நிகழ்வுகளாகுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தின் பல வர்த்தக நிலையங்களில் ஒரே இரவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களை தடுக்க சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ள விதம் பற்றிய அவதானிப்பில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து பல மணிநேரம் தங்கியிருந்து வேண்டிய பெறுமதியான பொருட்களை ஆராய்ந்து கொள்ளையிட்டுச் சென்றிருப்பதை அறியக் கூடியதாகவுள்ளது.

மக்கள் நெருக்கமாக வதியும் நகர் சார்ந்த பகுதிக் கடைகளில் இவ்விதம் கொள்ளைகள் நிகழ்ந்திருப்பது மிகப் பெரும் விலை கொடுத்து மீளப்பெற்றுக் கொண்ட நிரந்தர அமைதிச் சூழலின் மீது எமது மக்களுக்கு அவநம்பிக்கையினை ஏற்படுத்தும் நிகழ்வுகளாகும்.

ஒரே இரவில் திருநெல்வேலி சந்தைப் பகுயில் 8 வர்த்தக நிலையங்களிலும் அவ்வாறே வடமராட்சி நெல்லியடியில் 4 வர்த்தக நிலையங்களிலும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சம்பவங்களின் உடனடி விளைவாக உற்பத்தி சார்ந்த பாரிய முதலீடுகள் மீது குடாநாட்டு மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயமிருப்பதையும் இங்கு நாம் வருத்தத்துடன் சுட்டிக்காட்ட வேண்யுள்ளது.

போருக்கு முற்பட்ட காலங்கள் போலன்றி தற்போது சிறிய தொழில்சார் முதலீடுகளுக்கும் பெரும் தொகை நிதி தேவைப்படும் நிலையில் இவற்றை வங்கிகளிடமோ அன்றி தனியாரிடமிருந்தோ கடன் பெற்றே தற்போதைய வர்த்தக நடவடிக்கைகளையும் கூட முன்னெடுக்க வேண்டிய நிலையில் இன்று குடாநாட்டு மக்கள் உள்ளனர்.

சுயாதீனமான வர்த்தக முதலீடுகள் மீது இக்கொள்ளைச் சம்பவங்கள் இன்று ஏற்படுத்தியிருக்கும் இப்பாதிப்பானது, எதிர்காலத்தில் சுதந்திரமான திறந்த போட்டி அடிப்படையிலான வர்த்தக முதலீடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அது குடாநாட்டுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் இடையிலான பொருட்கள் சேவைகள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

எனவே குடாநாட்டு முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் பாதுகாப்பான அச்சமற்ற சூழ்நிலையில் தமது உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கண்ணியமான கடமை உணர்வுடன் செயற்பட்டு உதவ முன்வர வேண்டும் எனவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .