2025 ஜூன் 21, சனிக்கிழமை

கடமைக்கு திரும்பாத விரிவுரையாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் இல்லை: எஸ்.பி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

கடமைக்கு திரும்பாத விரிவுரையாளர்கள் எவருக்கும் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான இணைந்த விஞ்ஞான அலகிற்கான 3 மாடி கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த ஜூலை மாதம் சம்பள உயர்வாக சிரேஸ்ட பேராசிரியர்களுக்கு 18,579 ரூபாவும்,  பேராசிரியர்ளுக்கு 15,025 ரூபாவும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இணை பேராசிரியர்களுக்கு 9,888 ரூபாவும் முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு 7,150 ரூபாவும் இரண்டாம் தர சிரேஸ்ட பேராசிரியர்களுக்கு 5,424 ரூபாவும் விரிவுரையாளர்களுக்கு 3,842 ரூபாவும், பயிற்சி விரிவுரையாளர்களுக்கு 2,953 ரூபாவும் சம்பள உயர்வாக வழங்கப்பட்டுள்ளது. அநேகமான பகிஷ்கரிப்பாளர்கள் இச் சம்பள உயர்வைப் பெறவில்லை.

அடுத்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இன்னொரு சம்பள உயர்வாக, சிரேஷ்ட பேராசிரியர்களுக்கு 15,195 ரூபாவும் பேராசிரியர்ளுக்கு 11,928 ரூபாவும் இணை பேராசிரியர்களுக்கு 11,050 ரூபாவும் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு 4,738 ரூபாவும்  இரண்டாம் தர சிரேஷ்ட பேராசிரியர்களுக்கு 3,157 ரூபாவும் விரிவுரையாளர்களுக்கு 1,995 ரூபாவும் பயிற்சி விரிவுரையாளர்களுக்கு 1,328 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்களுடன் ஒப்பிடுகையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மிக அதிகமான சலுகைகளைப் பெறுகின்றனர்.

அதிகமான கல்விமான்கள் 65 வயது வரை வேலை செய்யும் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளதோடு 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இச்சலுகை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அடுத்ததாக விரிவுரையாளர்களுக்கே உள்ளது. வேறு எந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் கிடையாது.

இவர்களுக்கு வருடாந்தம் சாதாரண விடுமுறைகள் தவணை விடுமுறைகள், வாராந்த விடுமுறைகள் உட்பட மேலதிக, 3 மாத சம்பள விடுமுறை, 42 நாள் வெளிநாட்டுச் சுற்றுலா விடுமுறை என்பன போன்ற விடுமுறைகள் வழங்கப்படுவதுடன், நாளாந்த வேலை நேரத்தில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.

ஆனால், நீங்கள் எமது எதிர்கால சந்ததியை வளமுள்ளவர்களாக உருவாக்க வேண்டிய கடப்பாடு உங்களிடமே உள்ளது. யாழ். பல்கலைக்கழகம் 30 வருடகால நெருக்கடியான காலத்தில் இருந்து மீண்டுள்ளது. தற்போது இதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

நாம் எதிர்வரும் காலத்தில் பொறியியல் துறையையும் அபிவிருத்தி செய்ய பல திட்டங்களை கொண்டுள்ளோம். எனவே, நான் மீண்டும் இந்த கல்வியாளர்களிடம் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை முதல் மீண்டும் வேலைக்கு திரும்பும் படி வேண்டிக்கொள்கின்றேன்.

உங்களுக்கான சகல சம்பள நிலுவைகளும் வழங்கப்படும். இதல் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம், வேலைக்கு சமுகமளிக்காத எவருக்கும் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது என்பதை கருத்திற் கொள்ளவும்.

அத்துடன், இவ்வருடத்தில் மேற்கூறிப்பிட்ட சம்பள உயர்வுகளை தவிர, வேறு எந்த சம்பள உயர்வுகளும் வழங்கப்படமாட்டாது. அடுத்த வரவு, செலவு திட்டத்தில் வேறு பல திட்டங்களை நாம் வகுத்துள்ள போதிலும் தற்சமயம் அந்த திட்டங்களையும் தெரிவித்துக் கொள்ள முடியாது' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .