2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காட்டாட்சியே யாழில் 'ஐந்து நட்சத்திர' ஜனநாயகம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெனி)

யாழ்ப்பாணத்தில் காட்டாட்சியே நடைபெறுகிறது. அதனை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு நாட்டில் தேர்தல் நடத்துவதால் மாத்திரம் ஜனநாயகம் வந்துவிடாது. யாழில் காட்டாட்சியே 'ஐந்து நட்சத்திர' ஜனநாயகமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாண உள்ளூராட்சி சபை  தேர்தல்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இராணுவத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, கலந்துகொண்ட மக்களையும் அடித்து தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், எனது செயலாளர் அச்சுவேலியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டார். அதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாணம் வந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இதே புலனாய்வுப் பிரிவினரால்
தாக்கப்பட்டார். மல்லாகத்தில் தமது காணிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனநாயக  போராட்டத்திற்குத் திரும்பியவர்களின் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கழிவு ஓயில் ஊற்றப்பட்டது.

நெல்லியடியில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் கொடியுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சமூட்டினர்.  சுன்னாகம் பிரதேச சபையின் புதிய கட்டடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. முல்லைத்தீவில் நடைபெற்ற காணி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கற்களும் சாணமும் வீசப்பட்டது.

இப்பொழுது நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் வழிமறிக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பிரதேச சபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை இராணுவத்தினர் அபகரித்ததை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வெளிப்படுத்தியதாலும் கோப்பாய் பொலிஸி முறைப்பாடு செய்ததாலும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரும் இதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரித்தான ஜனநாயக உரிமை இராணுவத்தினரால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு என்பது மிகவும் மோசமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இராணுவத்தினருக்கு முன்பாக பொலிஸார் கையாலாகதவர்களாக இருக்கின்றனர்.

ஜெனிவாவில் இனங்களுக்கிடையில் நல்லுறவை பற்றியும் மனித உரிமைகளை  பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதி அவர்களே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள். தெற்கு வடக்கு உறவுகள் பலப்பட வேண்டுமாக இருந்தால் இந்த விடயங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்" என்றார்.

  Comments - 0

  • Sumathy M Thursday, 18 October 2012 02:48 AM

    சுரேஷ் ஐயா அவர்களே ,யாழ்பாணத்தில் காட்டாட்சி பற்றி பேசுகிறீர்கள். இந்திய இராணுவ காலத்தில் நீங்கள் நடந்துகொண்டதை மறந்துவிட்டீர்களா..? இதன்காரணமாக மக்களால் நிராகரிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் தயவில் எம்பியாக இருக்கின்றீர்கள். TNA விட்டு தனித்து நின்று உங்களால் வெல்ல முடியுமா? அதனால்தான் சம்பந்தன் ஐயாவை திட்டிக்கொண்டும் தொடர்ந்தும் TNA யில் இருக்கிறீங்கள். காட்டாட்சி பற்றி கதைக்க உங்களுக்கு எதுவித அருகதையுமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X