2025 ஜூன் 21, சனிக்கிழமை

லலித், குகன் இருவரும் உயிரோடு இருப்பதாக கெஹெலிய கூறினார்: நீதிமன்றில் உதுல் சாட்சி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)


'லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் காணாமல் போகவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்று கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தகிதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினார் என்று 'நாம் இலங்கையர்' அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, இன்று யாழ். நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றில் ஆஜரான உதுல் பிரேமரத்ன நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்தார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில் கூறியதாவது,

'நான், நாம் இலங்கையர் என்ற அமைப்பின் அங்கத்தவராக இருக்கின்றேன். நாம் இலங்கையர் என்ற அமைப்பில் மனித உரிமைகள் மற்றும் இலங்கையில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகைளை முன்னெடுத்து வருகின்றோர்.

அத்துடன், காணாமல் போனோர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை திரட்டியதுடன், வடபகுதியில் உள்ள அகதிகளின் தேவைகள் குறித்து ஆராயந்து வருகின்றோம். நாம் இலங்கையர் என்ற அமைப்பில் லலித் குமார ஒரு நிறைவேற்று உறுப்பினராக இருக்கின்றார். லலித் குமார, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காணாமல் போனோர்களின் விபரங்களை திரட்டி வந்தார். அத்துடன், அரசியல் கைதிகளை சந்தித்து தகவல் திரட்டி வந்தார்.

2011.06.23 அன்று கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஒழுங்குகளை லலித் மேற்கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்டத்தின் போது, லலித் கலந்துகொள்ளவில்லை. அப்போது கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள இராணுவ முகாமிற்கு இராணுவத்தினர் லலிதை அழைத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால் அவரை அழைத்துச்சென்றது இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டிற்கு. ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு 12.30 மணியளவில் இராணுவத்தினர் விடுவித்து விட்டார்கள்.

டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற இருந்தது. அதனை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை லலித் மேற்கொண்டிருந்தார். டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமைகள் தினம், அத்துடன், மக்கள் பேராட்டத்தின் மூலமாக யாழ். பிரதேசத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை ஆராய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நாங்கள் இருவரும் ஒரு இடத்தில் இருக்கவில்லை. நான் வேறு இடத்தில் இருந்தேன். அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமாரவின் வாகனத்தில் புறப்பட்டேன். என்னுடன், துமிந்த நாகமுவ, ஷமீர கொஸ்வத்த ஆகியோரும் இருந்தனர். நான் இரவு நேரத்தில் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரின் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

அடுத்தநாள் யாழ்ப்பாணத்திற்கு வந்து அச்சுவேலி சென்றிருந்தோம். குகன் வீட்டில் லலித் இருந்தார். லலித் மற்றும் குகன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாம் இலங்கையர் என்ற அமைப்பில் குகன் அங்கத்தவர் இல்லை. ஆனால், லலித்துடன் இணைந்து உதவிகள் செய்தார்.

குகன் வீட்டிற்கு சென்றபோது லலித் மற்றும் குகன் இருவரும் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு சென்றதாக குகனின் மனைவி கூறினார். அங்கிருந்து லலித்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டேன். ஆனால் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார முறைப்பாடு பதிவு செய்தார்.

அன்று மாலை தினக்குரல் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், மாலை கொழும்பிற்கு புற்பபட்டுவிட்டோம். நான் கொழும்பிற்கு சென்றவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபயவிடம் முறைப்பாடு செய்ததுடன் தலைமை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தேன். பின்னர், லலித்தின் தந்தையிடம் தொடர்புகொண்டு லலித் வந்தாரா என்று கேட்டேன். அவர் வரவில்லை என்று சொன்னார். கொஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் 11ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தோம்.

டிசம்பர் 15ஆம் திகதி அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் லலித் மற்றும் குகன் இருவரும் கடத்தப்பட்டு காணாமல் போகவில்லை. உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூறினார்.

அதன் பின்னர், ரூபவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சி அலைவரிசையில், இரவு 7 மணி மற்றும் 10 மணி பிரதான செய்திகளில் அவரது கருத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்து லலித் மற்றும் குகன் இருவரையும் விடுதலை செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கு சென்றபோது, எங்களை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த சிலர் எங்களது வாகனத்திற்கு கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டார்கள்.

பின்னர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டோம். அதன் பின்னர் 2012 ஜனவரி மாதம் 17ஆம் திகதி, 13 பஸ்களில் யாழ்ப்பாணத்திற்கு வந்து யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னாள் லலித் மற்றும் குகனை விடுதலை செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

எங்களை இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்த தடைபோட்டார்கள். நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போது ஏ – 9 வீதியில் வைத்து பொல்லுகளுடன் வந்த இராணுவத்தினர் எமது பயணத்துக்கு தடை போட்டார்கள். அந்த இடம் ஏ - 9 வீதியில் அமைந்துள்ளது. ஆனால் அவ்விடம் தொடர்பில் ஞாபகம் இல்லை' என்றார்.

உதுல் பிரேமரத்னவின் சாட்சியினைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கு விசாரணையை  எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .