2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த சதி: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'உதயன் பத்திரிகையின் கிளிநொச்சியில் அலுவலகத்தின் மீதும் பத்திரிகை விநியோகஸ்தர்கள் மீதும் அடையாளம் தெரியாதோர் தாக்குதல் செயலானது ஜனநாயக விரோதமானது என்பதுடன் அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சதி முயற்சியே இது' என நாடாராளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான  முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

இவ்வாறான தாக்குதல்கள் அமைதியை விரும்புவோரிடையே கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தும் இத்தகைய செயல்கள் மக்களிடையே அச்ச உணர்வையும்,  சமாதானத்தைக் குறித்த நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊடகத்துறையின் மீது அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

'மிக நீண்ட இருண்ட காலமொன்றை கடந்து வந்த மக்கள் புதியதோர் எதிர்க் காலத்திற்காக ஏராளம் கனவுகளோடும்,  நம்பிக்கைகளோடும், காத்திருக்கின்றனர். துயரம், வேதனை, இழப்பு, அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து மீண்டுவரும் மக்கள் படிப்படியாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நாட்டிலே அமைதியும், சுபீட்சமும் கிட்டும் என்ற உறுதியான எதிர்பார்ப்போடு அவர்கள் புதிய வாழ்வில் காலடி வைத்துள்ள இந்த நிலையில் அண்மைய நாட்களாக நடந்து வரும் சில அசம்பாவிதச் செயல்கள் எல்லா நம்பிக்கைகளையும் சிதறடிக்கும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளன' என்று அவர் கூறினார்.

'கடந்த 30.03.2013 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீதும் ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய செயல்கள் ஜனநாயக ரீதியான அணுகுமுறையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அத்துடன் இது அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்லிணக்கம், அமைதி, நிரந்தரத்தீர்வு என்ற நோக்கிலான செயற்பாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடும்' என்றும் அவர் கூறினார்.

'போர் முடிவுற்ற பின்னர் இந்த நாட்டிலே அமைதியை விரும்புகின்ற பெருந்திரளான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எமது அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். ஜனநாயக ரீதியான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த நாட்டிலே அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான வழிகளைத் திறக்க முடியும் என ஆழமாக நம்புகிறோம்.

அரசாங்கத்தின் நோக்கமும் இத்தகையதே. ஆனால் அமைதிச் சூழலில் பங்கத்தை ஏற்படுத்தி, ஜனநாயகச் செயற்பாடுகளில் நெருக்கடிகளை உருவாக்கி, அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, சமாதானத்தைக் குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன. இத்தகைய சக்திகளை இனங்கண்டு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பேண வேண்டும்என்றும், இத்தகைய செயல்களை நாம் அனுமதிக்க கூடாதென்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம்  வன்மையான கண்டிப்பதாகவும்' சந்திரகுமார் எம்.பி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .