2025 ஜூன் 19, வியாழக்கிழமை

அரசியல்வாதிகளே இனப்பிரச்சினையை உருவாக்கினர்: ரொஹான் குணரட்ன

Menaka Mookandi   / 2013 ஜூன் 13 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. இல்லாத இனப்பிரச்சினையை உருவாக்கியது அரசியல் வாதிகள். அரசியல்வாதிகள் தமது சுயலாபத்திற்காக உருவாக்கியதே இனப்பிரச்சினை' என சிங்கப்பூர் சர்வதேச கற்கைகள் பாடசாலையின் விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், யாழ். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 'மீள் இணக்கத்தில் உயர் கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் இன்று யாழ். கீறீன் கிறஸ் விருந்தினர் விடுத்தியில் நடைபெற்றது.

இதன்போது, போருக்குப் பின்னரான சகிப்புத் தன்மை மற்றும் சகவாழ்வினை ஊக்குவித்தலும், எனும் தலைப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

'நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே நான் வேற்றுமையை காணவில்லை. ஆனால், அரசியல்வாதிகளிடமும் இனத்தவர்களிடமும் வேற்றுமை காணப்படுகின்றதாக கூறுகின்றார்கள்.

அந்தவகையில், 1972ஆம் ஆண்டு முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் நேர்முகத் தேர்வு ஒன்றினை நடத்தும் போது நான் அவரிடம் இனப்பிரச்சினை இருப்பதற்கான காரணத்தினை கேட்டேன். 1956ஆம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டம் உருவாக்கியமையே இனப்பிரச்சினை ஏற்படக் காரணம் என்று அவர் தனது தவறினை ஒத்துக்கொண்டார்' என ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

'கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இன்று மிக சமாதானமான சூழல் காணப்படுகின்றது. யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11,600 பேரில் 4 பேரை தவிர ஏனையோர் சமுதாயத்துடன் இணைக்கப்படுவதை விரும்புகின்றார்கள். அவர்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாழ். மாவட்ட மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், 'பொது பல சேனா, சமயம் சார்ந்த அமைப்பு அல்ல. இது அரசியல் அமைப்பு. தனது அரசியல் இலாபத்திற்காக சமயத்தினை துஷ;பிரயோகம் செய்கின்றது. அந்த வகையில் வன்முறைகளை நாம் தடுப்போம். அரசாங்கம் எத்தனை வேலைகள் செய்கின்றது. வித்தியாசமான உணர்வுகள், வித்தியாசமான பாதைகள் இருக்கின்றன. அவற்றினை ஒற்றுமையுடன் செயற்பட்டு முன்னேற்றுவோம்' என்றார். 

'தமிழ், சிங்கள இனத்தவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும், காலங்கடந்து சென்றாலும், சில செயற்பாடுகளின் மூலம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயத்தமாக வேண்டும். ஒன்றிணைந்து செயற்படுவது கடினமாக இருந்தாலும், அவற்றினை சமாளித்து இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென்றும்' அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .