-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா
மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக நாங்கள் செய்யும் செயலை புத்திசுயாதீனம் அற்ற அரசியல்வாதிகள் சிலர் விமர்சித்து வருகின்றனர். நாங்கள் செய்யும் ஒரு செயலைக் கூட இவர்கள் மக்களுக்குச் செய்யவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் முரகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...
இந்த வீரசிங்கம் மண்டத்திற்கு வரலாற்று ரீதியில் ஒரு பெருமை இருக்கிறது. பெருமளவானவர்களுக்கு அரச நியமனங்கள் இங்கு வைத்து வழங்கப்பட்டுள்ளன. கடந்த 8 மாதங்களுக்குள் வடமாகாணத்தில் 9 ஆயிரம் பெருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது வெறுமன சாத்தியப்பாடானது ஒன்றல்ல. இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பு முக்கியமானது. விசேட அடிப்படையில் அரசினால் கவனிக்கப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை மனச்சாட்சியுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நாங்கள் செய்யும் அரசியலை சில புத்திசுயாதீனமற்ற அரசியல்வாதிகள் கொச்சைத்தனத்துடன் விமர்சிக்கின்றார்கள், விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறு விமர்சிப்பவர்களால் ஒருவருக்கேனும் வேலை வாங்கித் தரமுடிந்ததா? இல்லை. இங்கிருப்பவர்களையும் வெளியில் அனுப்பும் வேலையைத்தான் அவர்கள் செய்து வருகின்றார்கள்.
இன்று வடக்கில் மட்டும் வேலைவாய்ப்பு பிரச்சினை இல்லை. இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் உள்ள பிரச்சினை இது. இன்று உங்களுக்கு வழங்கியதுபோல் உங்களுக்குப் பின் உள்ளவர்களுக்கும் நியமனங்கள் நாங்கள் வழங்குவோம். அதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்வதற்கு நீங்கள் எங்களுடன் இணைந்து கைகோர்த்து நிற்கும்போது தான் இந்த மாகாணம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக நீங்கள் உழைக்க வேண்டும் என்றார்.