2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். இந்துக் கல்லூரியின் வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூலகம் நிறுவனத்தினர், நிறுவனங்களை ஆவணப்படுத்தல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினால் வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளையும் எண்ணிமப்படுத்தியுள்ளனர்.

இதில் 1933 இல் வெளிவந்த By Laws of the Jaffna Hindu College 1933 என்ற தலைப்பில் அமைந்த வெளியீடு முதல் 2013 இல் வெளியான யாழ். இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் கோயில் குடமுழுக்கு விழா மலர் வரை 135 வெளியீடுகள் உள்ளடங்கியுள்ளன.

இந்த வெளியீடுகளைச் சேகரித்து உதவியதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இளைஞர் வட்டத்திற்கு பெரும் பங்குண்டு. எண்ணிமப்படுத்தியுள்ள இந்த வெளியீடுகளை noolaham.org இல் சகலரும் பார்க்கக் கூடிய வசதியை நூலகம் நிறுவனத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர், விஜயதசமி அன்று நடத்திய விழாவில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து வெளியீடுகளையும் வெளியிட்டு வைக்கும் நிகழ்வையும் நடத்தினர்.

அதில் வெளியீடுகள் அனைத்தையும் 'ஆரம்' என்ற பெயரில் இறுவட்டாக தயாரித்து அதனுடன் 'ஆரம் –இந்துவின் ஆவணக் களஞ்சியம்' என்ற தலைப்பில் இறுவட்டின் உள்ளடக்க கைநூல் ஒன்றும் இணைப்பாக வெளியிட்டு வைத்தனர்.

இவ்வெளியீட்டு விழா கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் 'நூலகம் நிறுவனம்' சார்பில் நிறுவன ஆவணப்படுத்தல் செயற்திட்ட இணைப்பாளர் உமாதரன் சிவதாஸ் 'ஆரம்' வெளியீட்டுரையை நிகழ்த்தினார். இதில்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் நடேஸ்வராலயா நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்வும், யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் 'இன்றைய இளைஞர்களின் புத்தாக்க செயற்பாடுகள் பெரிதும் சாதனைகளாக அமைகின்றன? வேதனைகளாக அமைகின்றன?' என்ற தலைப்பிலான விவாத அரங்கும் நடைபெற்றது.

நூலகம் நிறுவனத்தினர் இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்வியல் அறிவுக் கூறுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் கடந்த 8 வருடங்களாக செயற்பட்டு வருகின்றனர். இலாப நோக்கற்ற இந் நிறுவனம் தன்னார்வ தொண்டர்களின் பாரிய பங்களிப்பில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .