2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வடமாகாணத்தில் மணற்கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாணம் முழுவதிலும் எவ்வித தொலை நோக்கும் இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்காக மணற் கொள்ளை இடம்பெறுவது தடை செய்யப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வடமாகாண விவசாய கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை அம்பன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துக்கூறிய அப்பகுதி பொதுமக்கள், 'இப்பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் மணல் அகழ்வு நடைபெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி மணல் அகழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும்.

வடமராட்சி கிழக்குப் பகுதியைத் கடற்கோள் தாக்கியபோது கரையிலிருந்து ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்துக்கு எமது கிராமத்துக்குள்ளும் கடல்நீர் புகுந்தது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் மட்டத்தைவிட ஆழமாக மணல் அகழப்பட்டமையினாலேயே இவ்வாறு நீர் உட்புகுந்ததுடன், எதிர்காலத்தில் நாங்கள் இப்பிரதேசத்தில் வாழ முடியாது.

விடுதலைப் புலிகள் காலத்திலும் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாயினும் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் ஒன்றை நிறுவி இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மணலையே எடுக்க அனுமதித்ததுடன், கிடைத்த வருவாயில் கணிசமான பகுதியை வடமராட்சி கிழக்கு மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள்.

தற்போது மணல் அகழ்பவர்களிடம் எங்கள் கிராமத்தின் பாதுகாப்புக்கருதி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் மணல் அகழ்வை நிறுத்தக் கோரிய போது, அவர்கள் எம்மை அச்சுறுத்தியதுடன் பலதடவைகள் ஆயுதமுனைகளிலும் மிரட்டியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் இவ்வேளையிலாவது மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'மணல் அபிவிருத்திக்குத் தேவையானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதேசமயம் அந்த மணல் அகழ்வினால் அப்பகுதி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த இயற்கைச்சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டு மக்கள் வாழமுடியாத சூழல் உருவாகுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன், யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் உவராகும் அபாயத்தில் இருக்கும் நிலையில், கடல் நீரை வலிந்து வரவழைக்கும் விதத்தில் கரையோர மணற்திட்டுகளை அகற்றுவதற்கு எவரையும் இடமளிக்க முடியாது. வடமாகாணசபை, மாகாணத்தில் நிகழ்ந்துவரும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மண் அகழ்வை ஒழுங்குபடுத்த விரைவில் ஆவண செய்யும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சந்திப்பு முடிவுற்றதும், அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் மண் அகழ்வு நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .