2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது: ஆனந்தசங்கரி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், சுமித்தி தங்கராசா, நவரத்தினம் கபில்நாத்

கடந்த 57 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் யுத்தத்தாலும் அதற்கு முன்பும் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து நலிவுற்ற எமக்கு பூரணமான மனக்கலக்கமற்ற வாழ்க்கையையும் அமைதியையும் திரும்பப் பெறக்கூடியதாக மீண்டும்; ஒரு பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறதென்பதை உரிமையோடு தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'1948இல் நாடு சுதந்திரமடைந்து 7 ஆண்டுகளின் பின் இன்றுவரை இன, மத வேறுபாடுன்றி வாழும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

நான் கூறப்போகும் விடயங்கள் உங்களுக்கு விருப்பமற்றதாக இருக்கலாம். ஆனால் அவை உண்மை மட்டுமல்ல. எவர் மறுத்துக் கூறினாலும் அந்த நிலைமையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.

நான் 2008ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் திகதி உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் 'கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை இந்த நாடு இழந்துவிடக் கூடாது'  என்ற தலையங்கத்தில் எழுதியிருந்தேன். அத்துடன் 'இன்னும் சில நாட்களுக்குள் உங்களை அலங்கரிக்கக் கூடிய மேலும் ஒரு பதவி வர இருக்கின்றது' என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

'1.7 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 7 நாடுகளின் அமைப்பாகிய சார்க் ஸ்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறீர்கள்! மேலும் எதுவித குற்றமும் செய்யாமல் பயப்பீதியுடன் வாழுகின்ற மக்களுக்கு சார்க் நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாக அமைகிறது.

பஸ், புகையிரத பிரயாணங்களை விட சாதாரணமாக வீதியில்கூட நடந்துசெல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. சார்க் அமைப்பின் முக்கிய பணிகள் - அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதே! துரதிஷ்டவசமாக அந்த நாட்களில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபடியால் விடுதலைப் புலிகளுடன் ஒரு தீர்வுக்கு வரக்கூடிய நேரமும் கனிந்திருக்கவில்லை. சூழ்நிலையும் சாதகமாயிருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, அதேபோன்றதொரு நிலையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாடு ஆண்டவனால் தரப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகவே எண்ணுகின்றேன்.

2008இல் சார்க் மாநாட்டின்போது நிலவிய அந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு ஒரு பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

54 நாடுகளில் 53 நாட்டுத் தலைவர்கள் பெரிய அல்லது சிறிய என்ற பேதமின்றி சமபலத்துடன் உலகின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய காமன்வெல்த் அமைப்பின் மாநாட்டை நீங்கள்  தலைமை தாங்க இருப்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் அநேகமாக அனைத்துத் தலைவர்களும் கலந்துகொள்வர். கனேடியப் பிரதம மந்திரியையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வைக்கவேண்டும். ஏனெனில் கனடா எமது நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதாக உதவியுள்ள ஒரு நட்பு நாடாகும். கட்டுநாயக்க விமான நிலையம் கனேடிய அரசால் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோடு – கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப் பாதையை உருவாக்குவதில் முதற்கட்டமாக வனவாசல, கண்டி வீதி - களனிப்பாலச் சந்தி ஆகிய இரு இடங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலங்கள் உருவாக்கப்பட்டு காரணம் தெரியாமல் பின்னர் கைவிடப்பட்டது.

அத்தோடு கனடாவின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் அம்மாகாணங்களின் பெயரிடப்பட்ட 9 டீசல் ரயில் எஞ்சின்களையும் வழங்கியிருந்தது என்பதை ஞாபகமூட்டுவதோடு அந்த எஞ்சின்கள் இன்றும் சேவையில் இருக்குமென நான் நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக கனடாவில் இன்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு நிலையில்தான் இந்தியாவிற்கும், இந்தியா பங்கெடுக்காத மாநாடு சேக்ஷ;பியரின் நாடகங்களில் ஒன்றான  'டென்மார்க்கின் இளவரசன் ஹம்லெற்' என்ற நாடகத்தின் ஹம்லெற் என்ற கதாபாத்திரம் இல்லாதிருப்பதற்கு ஒத்ததாகும்.

இந்த நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடு பதவியிலுள்ள பலர் தாம் சம்பந்தப்படாத விடயங்களில் கருத்துக் கூறுவதாகும். நான் அடிக்கடி கூறுவதுபோல மஹிந்த சிந்தனை வேறு சிலரின் சிந்தனையோடு கலக்கப்பட்டு மாசுபட்டு பலவீனமடைந்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமாக ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். மற்றும் 51 தலைவர்கள் மத்தியில் இந்தியப் பிரதமரின் பிரசன்னம் பெரியதோர் தாக்கத்தை கொடுக்கக்கூடியதாகும்.

இம்மாநாட்டில் இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கப்படும் முயற்சி விரைவில் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கக்கூடும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 52 தலைவர்கள் எடுக்கும் ஒரு பொது நிலைப்பாடு சில சமயம் உள்ளூர் தலைவர்களின் சிந்தனையை மாற்றி ஏற்புடையதான ஒரு தீர்வை எட்டக்கூடும். அத்தகையதொரு நிலைப்பாடு எடுக்கப்படுமாயின் அது உங்களுக்கு ஒரு பெரும் உதவியாக அமையும்.
எனது பங்காக நீண்டகாலமாக தடுப்புக்காவலில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண், பெண், அவர்களின் அப்பாவிக் குழந்தைகள் அனைவரையும் இத்தலைவர்களை கௌரவிக்கும் வகையில் நிபந்தனை எதுவுமின்றி விடுவித்து அனைவரின் பாராட்டையும் பெறவேண்டுமெனக்  கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தலைவர்கள் உலகின் மூன்றிலொரு பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க! காந்திஜி அவர்கள் முதன்முதலாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கையும் இந்தியாவும் எக்காரணம் கொண்டும் முரண்படக்கூடாது எனக் கூறிச்சென்றதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுநலவாய மாநாட்டுடன் இலங்கை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமான மனித உரிமை மீறல், காணிகள் அபகரிப்பு, அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் வீடுகளை இடித்தழித்தல் இதேபோன்ற சிறுபான்மை இனத்தவர்களுடைய உள்ளத்தையும், உணர்வுகளையும் புண்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .