2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Super User   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களது உறவுகள் மீது சிவிலுடையில் சென்ற சிலர் பொலிஸார் முன்னிலையில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொலிஸாரது நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது

இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"காணாமல் போனவர்களை தேடியறியும் குழுவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில்  காணாமல் போனவர்களது உறவினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த போராட்டம் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் 11 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சிவிலுடையில் சென்ற சிலர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகள்  சிங்களத்திலும் அரைகுறைத் தமிழிலும் சொல்லத்தகாத வார்தைகளால் ஏசியவாறே தாக்கியுள்ளனர். 

இதன்போது போராட்டத்தின் ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருச்செல்வம் மற்றும் பெண்கள் என பெருமளவானவர்கள் இந்த தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மகேந்திரன் உட்பட இருவர் மட்டுமே சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.  தாக்குதலுக்குள்ளான பெண்களும், ஏனைவர்களும் அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லாது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

முகங்களை மறைத்துக் கட்டியவாறு உளவுத் துறையினருடன் இணைந்து சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சிலருமாக சுமார் 50 பேர் கொண்ட குழுவினரே மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் நடைபெற்ற போது பொதுமக்களை பாதுகாக்கவோ, தாக்குதலாளிகளை தடுக்கவோ, கைதுசெய்யவோ பொலிஸார் முற்படாது கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.

தாக்குதலின் பின்னர் பொலிஸ் நிலைத்திற்குச் சென்று முறைப்பாடு செய்வதற்கு மகேந்திரன் முயன்ற போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நடவடிக்கை தன்னை அச்சுறுத்தும் வகையிலும் முறைப்பாடு செய்யாமல் திரும்பிச் செல்லவைக்கும் நோக்கிலும் அமைந்திருந்ததாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

பொலிஸாருடைய நடவடிக்கைகளை நோக்கும்போது மேற்படி பொதுமக்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசாங்கம் இருந்துள்ளது என்பதனையே வெளிப்படுத்துகின்றது. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்த பின்னரும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கூட தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க முடியாதளவுக்கு மோசமான அடக்குமுறையே காணப்படுகின்றது.

பொதுநலவாய மாநாடு முடிவடைந்து ஒரு மாத காலம் நிறைவடைவதற்குள் நடைபெற்ற இந்த சம்பவமானது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதனையும் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்காக வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற போவதில்லை என்பதனையுமே  மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலும் பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .