2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வடமாகாண விவசாயிகளிடம் அறவிடப்பட்ட கழிவு நீக்கம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறையை அடுத்த ஆண்டு முதலாம் திகதியிலிருந்து நீக்கப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையொன்றினை விவாசாய அமைச்சர் இன்று (20) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் நாம் சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததில் அவர்கள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதிலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதில் தங்கள் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்று வருவதைப் பிரதான முறைப்பாடாக வெளிப்படுத்தியிருந்தனர். உதாரணத்துக்கு, 100 கிலோ விளைபொருளில் விற்பனையாளர்கள் 10 கிலோவைக் கழிவாக எடுத்துக்கொண்டு 90 கிலோவுக்கே பணம் வழங்கி வருகின்றனர்.

அதேசமயம் சந்தையைக் குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்கள் 100 கிலோவுக்குமான வரியை விவசாயிகளிடம் அறவிட்டு வருகின்றனர். இந்த வரியின் விழுக்காடும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகின்றது.

விளைபொருட்களுக்குத் தரத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும்போது இக்கழிவு நடைமுறையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக முறையிட்ட விவசாயிகள், போராட்ட காலத்தில் அறிமுகமான இக்கழிவுமுறைமை இனிமேலும் தொடர்வது நியாயமாகாது என்பதால் இதனை நீக்கித் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக, வடமாகாண உள்ளூராட்சிச் சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்கள அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடியதில், எதிர்வரும் 2014ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து இக்கழிவு நடைமுறை நீக்கப்படுகின்றது என்றும், குத்தகைக்காரர்கள் அறவிடும் வரி 4 விழுக்காடுக்கு மேற்படலாகாது என்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இம்முடிவுகள் வடமாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களது அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. மூன்று தசாப்த காலப் போரும் இடப்பெயர்வுகளும், காலநிலை மாற்றங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் விவசாயப் பொருளாதாரத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விவசாயிகளுக்கு விவசாயத் தொழில் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி, சரிவுற்றிருக்கும் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண விவசாய அமைச்சர், உள்ளூராட்சி சபைகள், திணைக்களங்கள் ஆகியோரால் எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவுகளைத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .