-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா
நான் நிரபராதி என்பதனை நீதிமன்றத்தினூடாக நிரூபிப்பேன் என்று கமலேந்திரன் தனது சட்டத்தரணி மூலம் எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று (23) தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த தொண்டர் ஊழியர்களின் போராட்டத்தை நிறைவு செய்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தான் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளேன் என்றும் கட்சிக்கும் உங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் நான் செயற்படவில்லை என்றும் கமலேந்திரன் தனது வக்கீல் மூலம் எனக்கு தகவல் அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அண்மையில் ஜனாதிபதி என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் குழம்பிப்போயிருப்பதாக கேள்விப்பட்டேன் என்று கேட்டார்.
அதற்கு, கமலேந்திரனின் பெற்றோர்கள் என்னோடு இருந்தவர்கள். அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. சிறுவயதிலிருந்தே கமலேந்திரனும் அவரது சகோதரர்களும் என்னோடு இருக்கிறார்கள். அதனால் தான் இந்தச் சம்பவத்தை என்னால் தாங்க முடியவில்லை என்று ஜனாதிபதிக்குத் பதிலளித்திருந்தேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.