2025 ஜூன் 25, புதன்கிழமை

வட மாகாணத்தில் மாட்டுவண்டி சவாரிப் போட்டி

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று வடமாகாண விவசாய அமைச்சினால் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். 

இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சினால் இன்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவதாவது,

நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி மூளாய் பொன்னாலைச் சவாரித்திடலில் எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

காளைகளை எவ்விதத்திலும் துன்புறுத்தலாகாது என்ற நிபந்தனையுடன் நடத்தப்படவுள்ள இப்போட்டிக்கான விண்ணப்பப்படிவங்களை 295, கண்டி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்வதோடு, போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 077 8449739 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

இந்த போட்டிற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 10ஆம் திகதியாகும். இம்மாபெரும் மாட்டுவண்டிச் சவாரி போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள உழவர் பெருவிழாவின் போது வழங்கப்படவுள்ளது.

பூமிப்பந்தெங்கும் பரந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவராலும் சமய வேறுபாடுகள் கடந்து கொண்டாடப்படும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருவிழாவாகத் தைப்பொங்கல் விழா தொன்றுதொட்டு இடம்பெற்று வருகிறது.

உழவுத் தொழிலில் நல்ல விளைச்சலைக் கொடுத்தமைக்காக இயற்கைக்கும், உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்பட்டு வரும் இத்தைத்திருநாளையொட்டித் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் இடம்பெறுவது வழக்கம்.

எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பாரம்பரிய விளையாட்டுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தவகையில், வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .