2025 ஜூன் 25, புதன்கிழமை

மார்ச் மாதத்திற்குள் இடைக்காடு அக்கரைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம்: குணரத்தின வீரகோன்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். இடைக்காடு அக்கரைப் பிரதேசத்தில் 148 குடும்பங்களை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்றுவதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரகோன் இன்று (03) உறுதியளித்தார்.
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், இடைக்காடு அக்கரைப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
 
இதன்போது, குறித்த பகுதியிலிருந்து 1987ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 148 குடும்பங்களை மீள்குடியமர்த்துமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் கோரிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
“யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அதிசயப்படக்கூடிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அவர் தமிழர், சிங்களவர் என இன பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் ஒரேவிதமான அபிவிருத்தியை மேற்கொண்டு வருகின்றார்.
 
இதுவரை காலமும் வடமாகாணத்தில் நடைபெறாத வடமாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி வெற்றிகரமான நடத்தி முடித்துள்ளார். அத்துடன், யார் வேண்டுமாலும் எந்த கட்சிக்கும் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையைக் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.
 
ஆனால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதற்காக நாங்கள் சந்தோசப்படுகின்றோம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நாங்கள் மதிக்கின்றோம். அவர் முன்னாள் நீதியரசர் என்பதால் மாகாண சபை, மத்திய அரசாங்கத்திலுள்ள அதிகாரங்கள் தொடர்பாகவும் நன்றாக அறிந்திருப்பார் எனவும் நான் நம்புகின்றேன்.
 
நாம் அழித்த பூமியை எமது அடுத்த சந்தியினருக்கு பாரம் கொடுக்க முடியாது. ஆகவே நீங்களும் எங்களுடன் ஒன்றினைத்து அபிவிருத்திகளை செய்ய தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும். 2010ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை பகிர்ந்தளித்தோம்.
 
அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். அவருக்கு நீங்கள் வெற்றியினை வழங்க வேண்டும். நீங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தும் அவர் உங்களுக்கு என்ன செய்தார்?” என அமைச்சர் வினவினார்.
 
இங்கு வருகைதந்த அமைச்சர், தலா ஒரு குடும்பத்திற்கு 8 தகரங்களும் 12 சீமெந்து பக்கெற்றுகளும் என்ற அடிப்படையில் 48 குடும்பங்களுக்கு வழங்கியதுடன், கிராம மாதர் சங்கத்திற்கு 6 குடி நீர்த் தாங்கிகளையும் வழங்கினார். 
 
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் ஆகியோரும், அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .