2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா
 
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரோவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேராவும் யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றி தெரிவித்திருந்தார்கள்.
 
யாழ். பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த பொலிஸார் கடமையாற்றுகின்றனர்
யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸாருக்கு பற்றாக்குறை எதுவும் இல்லையெனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் கடமையாற்றுகின்றனர் எனவும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரோ தெரிவித்துள்ளார்.
 
'பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸார் கடமையாற்றுவது சம்பந்தமான' ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக தமிழில் டிப்ளோமா பெற்ற சிங்கள பொலிஸார் தற்போது இடம்பெற்ற இடமாற்றத்தின் போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளார்கள்.
 
இவர்கள் மலைநாட்டிலிருந்து வந்துள்ளமையால் நன்றாக தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதனால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸார் இல்லையென்ற நிலைமை தற்போது இல்லை. பொலிஸ் நிலையங்களிலுள்ள தொலைபேசி இணைப்புகளில் கூட தமிழ், சிங்கள பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
 
தமிழ் பொலிஸார் வெளியில் சென்றிருக்கும் போதும் தமிழில் வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கக் கூடிய வகையில் சிங்களப் பொலிஸாருக்கு தமிழில் பதில் கூறப்படும் வகையில் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டதுடன், பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
 
சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேக நபர்கள் விளக்கமறியலில்
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
உடுப்பிட்டி இலகடியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி வீட்டில் இருந்தவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அதே இடத்தைச்சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்து கடந்த டிசெம்பர் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே, நீதிபதி குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கொடிகாமப்பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி இடைக்குறிச்சியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை கடந்திச்சென்றதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இது சம்பந்தமாகவும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வரணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கடந்த 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதிபதி குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
யாழில் சிறுகுற்றம் புரிந்த 203 பேர் கைது
யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 203 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.
 
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
 
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்கள் பின்வருமாறு,
 
யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில், அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 34 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 12 பேரும், கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவரும், அத்துமீறி வீட்டிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 03 பேரும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் 07 பேரும், பொது இடத்தில் மது அருந்தியவர்கள் 02 பேரும், சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரும், சந்தேகத்தின் பேரில் 02 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 32 பேரும், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவர்கள் 04 பேரும், களவுகள் தொடர்பான குற்றச்சாட்டில் 07 பேரும், மற்றும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமானவர்கள் 15 பேருமாக மொத்தமாக 120 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றித்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றச்செயல்கள் சம்பந்தமாக 04 பேரும், சட்டவிரோதமாக மது விற்பனையில் செய்தவர்கள் 02 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 11 பேரும், சந்தேகத்தின் பேரில் 11 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 06 பேரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 49 பேருமாக மொத்தமாக 83 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றித்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .