2025 ஜூன் 25, புதன்கிழமை

பலவீனத்தினாலேயே அரசாங்கம் என்மீது குற்றஞ்சாட்டுகின்றது: அனந்தி சசிதரன்

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ள அரசாங்கம் இவ்வாறான ஊடகப் பரப்புரைகள், அச்சுறுத்தல் மற்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் மூலம் என்மீது அவதூறு கற்பிக்க முயல்வது அரசாங்கத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் னந்தி சசிதரனைக் கைதுசெய்து புனர்வாழ்வளிப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அனந்தி சசிதரனால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 'இந்த விடயம் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மனித நேய அமைப்புக்களும், ஆர்வலர்களும், புலம்பெயர் தமிழர்களும் என்னிடம் விசாரித்து வருகின்றனர்.

உண்மையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ளதாக கூறப்படும் இலங்கை அரசு இவ்வாறான ஊடகப் பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல் மூலமூம் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் மூலமும் என்மீது அவதூறு கற்பிக்க முயல்வது அதன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

கடந்த 21 வருடங்களாக அரச சேவையில் முகாமைத்துவ உதவியாளராக மூன்று மாவட்டங்களில் பணியாற்றிய என்னை பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டி புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கூறுவது அபத்தமான விடயமேயாகும்.

தென்பகுதி இனவாதத் தலைமைகளை தேசபக்தர்களாக இனங்காட்டி அவர்களின் இனவெறிக் கருத்துக்களை கைதட்டி பாராட்டும் அரசு, மனித உரிமைகள் பற்றி நியாயபூர்வமாக பேசி அதற்காக மட்டுமே குரல் கொடுத்து வரும் என்போன்றவர்களை பிரிவினைவாதிகளாக இனங்காட்டமுயல்வதை என்னவென்று சொல்வது?

உண்மையில் சர்வதேச ரீதியில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கும் விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள இந்த அரசு, தனக்கு நெருக்கடியை கொடுத்து வரும் சர்வதேச சமூகத்தையும் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முள்ளிவாய்கால் போர் முடிவின் போது நான் எனது பிள்ளைகள் மற்றும் கணவருடன் அரச படையினரிடம் சரணடைந்த போது என்னையும் என் பிள்ளைகளையும் விட்டுவிட்டு  என் கணவரை மட்டும் தடுத்து வைத்தது ஏன்? அப்போதே எமக்கு புனர்வாழ்வளித்திருக்கலாமே!
இன்று நான் ஒரு தனிமனுசியல்ல... எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி. அவர்கள் என்னை பிரிவினைவாதியாகப் பார்க்கவில்லை. தமது வாழ்வியல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.

சர்வதேச சமூகமும் என்னை அப்படித்தான் அங்கீகரித்தது. அத்துடன், அவர்கள் எனக்கு ஆத்ம பலத்தை தந்து எனது நியாயமான போராட்ட குரலுக்கு செவிசாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நான் பிரிவினைவாதியென்றால், என்னை தேர்தலில் நிறுத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், என்னை ஆதரித்து வாக்களித்த மக்கள், எனக்கு தமிழ்த் தேசியத்தை போதித்து நிற்கும் மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா ஐயா உட்பட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பிரிவினைவாதிகளாக அல்லவா இருக்க வேண்டும்.?

இனி இவர்கள் அனைவருக்கும் அல்லவா புனர்வாழ்வளிக்க வேண்டி வரும்?

ஒரு இனத்தின் நியாயமான மனித, அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வழங்கும் திராணியற்று அம்மக்களை ஆயுதமுனையில் ஒடுக்கி வைக்க நினைக்கும் பேரினவாதச் சிந்தனையாளருக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் அதனை மேலும் மேலும் தவறுகளையே செய்யத்தூண்டுகிறது என்பதையே இந்த புனர்வாழ்வு பற்றிய செய்தி வெளிப்படுத்தி நிற்கின்றது' என அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .