2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கமலேந்திரனிடம் குசலம் விசாரித்த முதலமைச்சர்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், குணசேகரன் சுரேன், எஸ்.ஜெகநாதன்


நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷியன்  கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் சபை அமர்வுகளில் இன்று திங்கட்கிழமை  கலந்துகொண்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியதை அடுத்து,  சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சபை அமர்வுகளில் இவர் பங்கேற்றார்.

அவர் சபைக்குள் வருகை தந்தபோது வாருங்கள், வாருங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? நீங்கள் வரும்போது உங்களுக்கு கைலாகு கொடுத்து வரவேற்க வேண்டுமென நினைத்திருந்தேன். வாருங்கள் உங்களை வரவேற்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார்.

சபைக்குள் பிரவேசித்த கமலேந்திரன் முதலாவதாக முதலமைச்சருக்கு கைலாகு கொடுத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கமலேந்திரன் சபைக்கு வந்திருந்தார்.

சிறைச்சாலை வாகனத்தில் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சபை அமர்வுகளில் கலந்துகொண்ட கமலேந்திரன், சபையில் முதலாவதாக முதலமைச்சருக்கு கைலாகு கொடுக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதிக்குள் நுழைந்தவுடன் சபைத் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானத்திடம் தான் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதினைத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டார்.

இன்றைய வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் வடமாகாண சபையின் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நாதஸ்வர, மேளக் கச்சேரி இடம்பெற்றதுடன், அதனை நிகழ்த்திய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். வடமாகாணக் கட்டிடத் தொகுதிக்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு இது நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில், வடமாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் கமலேந்திரனை டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்ததுடன், றெக்ஷியனின் மனைவி ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி வழக்கு கடந்த 23ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான்  எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கமலேந்திரன் மற்றும் றெக்ஷியனின் மனைவி சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், கமலேந்திரனை வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கும்படி மன்றில் கோரியிருந்தார்.

இதற்கு பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதன்போது, சிறைச்சாலை பொறுப்பதிகாரி, 'பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் பட்சத்தில் கமலேந்திரனை வடமாகாண சபைக்கு அழைத்துச் சென்று வருவோம்' என மன்றில் தெரிவித்தார்.

இதற்கமைய கமலேந்திரனை வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தினையும் செய்வார்கள் என நீதவான் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கமலேந்திரன், றெக்ஷியனின் மனைவி அனித்தா, கொலையுடன் தொடர்புடையவர் எனக் கைதுசெய்யப்பட்ட ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .