2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தொழில் வழங்குநர்களுக்கு வழங்கப்படவுள்ளது: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 28 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 05 தொழில் வழங்குநர்களுக்கு அச்சுவேலி கைத்தொழில் பேட்டை வளாகத்தில் அவர்களுக்குரிய பகுதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை  கையளிக்கவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொழிற்பேட்டைகளினது தொழிற்றுறை நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு, மருதானையிலுள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில்  நேற்று திங்கட்கிழமை (27) நடைபெற்றது. இதன்போது தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இயங்கும்போது, அதனூடான தொழிற்றுறை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இதனை விரைவாக இயக்குவதற்கான நடவடிக்கையை  துரிதப்படுத்தவும். 

கைத்தொழில் பேட்டைகளினது தொழிற்றுறை நடவடிக்கைகள் ஆராயப்படவுள்ளன. தொழிற்றுறை நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேம்படுத்துவதில் தொழில் பேட்டைகள் எதிர்நோக்கும் இடர்பாடுகளை களைந்து அவற்றை மேலும் முன்னேற்றகரமாகவும் இலாபகரமுள்ளதாகவும் கைத்தொழில் பேட்டைகளை  மாற்றியமைக்க வேண்டும்.

கைத்தொழில் பேட்டைகளின் உட்கட்டுமானம் மற்றும் ஏனைய மேம்பாட்டுத் துறைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 பில்லியன் ரூபாவை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கு இடையில் செலவு செய்து வேலைகள் பூரணமாக்கப்பட வேண்டும்.

இதேவேளை, பனையிலிருந்து பெறப்படும் பதனீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும்  நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்' என்றார். 

இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில் பேட்டைகளின் உள்ளக வீதிகள், மின்சாரம், நீர்விநியோகம், வாடகை மற்றும் உட்கட்டுமானங்கள் தொடர்பிலும்; ஏனைய விடயங்கள் தொடர்பிலும் துறைசார்ந்தோர்களிடம் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், பள்ளேகல பகுதியிலுள்ள கைத்தொழில் பேட்டை தொடர்பிலும் கவனம்  செலுத்தப்பட்டது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .