2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆவா குழுவை சேர்ந்த எண்மருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 31 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலைச் சேர்ந்த 8பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மேலும் மூவரை எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் உட்பட 13பேர் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு ஜனவரி மாதம் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆவா குழுவினரை பிணையில் விடுவிக்கும்படி யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றில் ஆஜராகி கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கினை பதில் நீதவான் பிற்பகலிற்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து மீண்டும் பிற்பகலில் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான், ஆவா கும்பலை இன்று 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று (31) மேற்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸார் எதிர்ப்புத் தெரிவிக்காத பட்சத்தில் 8 பேர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய மூன்று பேரும், கைக்குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட 8பேர் சார்பாக சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ், சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், மற்றும் வி.திருக்குமரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதுவரையிலும் அந்தக் குழுவினைச் சேர்ந்த 15பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்கும்பலைச் சேர்ந்த ஏனையவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .