2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வடக்கில் அரிசிக்கு தட்டுப்பாடு; விவசாய அமைச்சர்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா   


மழையின்மை காரணமாக வடமாகாணத்தில் நெல் விளைச்சல் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் வரும் மாதங்களில் வடமாகாண நுகர்விற்கு அரிசி போதுமானதாக இல்லாத நிலை ஏற்படும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் விளைந்த நெல்லினை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்து அதனை வட மாகாணத்திலேயே சந்தைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் யாழ். பொது நூலகத்தில் நேற்று (04) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், விவசாயிகள் சம்மேளனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கடந்த ஆண்டு மழை வீழ்ச்சி காரணமாக வடமாகாணத்தின் நெல் உற்பத்தியில் இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படவுள்ள உணவுப் பற்றாக்குறையை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது பற்றிய கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர்,

இம்முறை  மழையின்மை காரணமாக வடமாகாணத்தில் நெல் விளைச்சல் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் வரும் மாதங்களில் வடமாகாண நுகர்விற்கு அரிசி போதுமானதாக இல்லாத நிலையில் அதனை வெளியிடங்களிற்கு விற்பனை செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார்.

'ஆகவே, வட மாகாணத்தில் விளைந்த நெல்லினை வட மாகாணத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்து அதனை உள்ளுர் சந்தையிலே சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால், வட மாகாணத்தின் அரிசித் தேவை பூர்த்தி செய்யப்படும் அதேவேளை விவசாயிகள் தகுந்த விலைகளில் தங்கள் நெல்லினை விற்பனை செய்யக்கூடியதாகவிருக்கும்' என்று குறிப்பிட்டார். 

'வட மாகாணத்தில் விளையும் நெல்லில்; கணிசமான அளவைத் தென்பகுதி வர்த்தகர்களே கொள்வனவு செய்து வருகின்றனர். அதிலும் வயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர்கள் முன் வருவதில்லை.

இதனை விவசாயிகள் பலரும் எனது கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே வடக்கின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் நெல் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த ஆண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்ய முன்வர வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

'சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆண்டுதோறும் அரச அதிபர்களினால் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும் குறிப்பிட்ட தொகை முற்பணத்தைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட நெல் கொள்வனவைச் செய்து வருகின்றன. நெல் அறுவடை ஆரம்பமாக இருப்பதால் அரச அதிபரிடம் இருந்து பெறப்படும் முற்பணத்தை விரைந்து பெறுவதற்கும், அந்நிதியை அதிகரிப்பதற்கும் ஆவண செய்யப்படவேண்டும். தேவையேற்படின் வங்கிகளின் கடன் உதவியைப் பெறலாம் என்றும் இக்கலந்துரையாடலில் முடிவாகி உள்ளது' என்றும் அவர் கூறினார்.

'கூட்டுறவாளர்கள் கொள்வனவு செய்யும் நெல்லை உலரவிடுவதற்கும், களஞ்சியப்படுத்துவதற்கும் போதிய வசதிகள் இல்லாது இருப்பதை விவசாயிகள் எனக்கு சுட்டிக்காட்டினார்கள். அவசர நிலையாகக் கருதி இருக்கின்ற குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி உச்சபட்ச கொள்வனவைச் செய்யுமாறும்,  இதற்குரிய வசதிகளைச் செய்வதற்கு ஆவண செய்வதாகவும்' என்று விவசாய அமைச்சர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .