2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா போகமாட்டேன்: அனந்தி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தான் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை கடந்த 27 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனந்தி மாகாண சபையில் அன்றைய தினம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், 'இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராகவுள்ள சகோதரி அனந்தி தகுதியானவர் என நினைக்கின்றேன்' என்றார். இதனை ஏற்றுக்கொண்ட சபை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு அனுமதியளிப்பதாக சபை தவிசாளர் சி.வீ.கே. சிவஞானம் அறிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அனந்தி, 'அனந்தி மட்டுமல்ல இன்னும் பல உறுப்பினர்கள் அங்கு செல்ல வேண்டும்' என்று கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சபைத் தவிசாளர், 'அது மாகாண சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டது. இதனால் அவர்கள் தீர்மானம் எடுத்து ஜெனீவா செல்லலாம்' என்றார்.

அத்துடன், அங்கு கூட்டத் தொடரில் கலந்துகொள்ள முடிந்தால் கலந்துகொள்ளலாம் இல்லையேல் வெளியில் நின்று ஆதரவளிக்கலாம் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வளிக்கவேண்டும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .