2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மூன்றாம் தரப்பின்றி முடியாது: சி.வி.

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெகநாதன்

மூன்றாம் தரப்பின் உதவி இல்லாமல் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதென்பதுடன், இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித தீர்வையோ, வேறு எதனையோ பெற்றுக்கொள்ள முடியாதென்றும்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு  செவ்வாய்க்கிழமை (11) விஜயம் செய்த ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஹாலியாங் சூவுடனான  சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், 

'ஐ.நா.வின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினர். என்னைச் சந்திப்பதற்கு முன்னர் ஆளுநரை அவர்கள் சந்தித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வடமாகாண ஆளுநர் விருப்பம் தெரிவித்ததாக ஹாலியாங் சூ என்னிடம் கூறினார்.

இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு அரசாங்கத் திணைக்களங்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஹாலியாங் சூவிடம் கூறினேன்.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் தாம் கலந்துரையாடியதாகவும் இந்த விபரங்களை அவர்கள் வழங்குவார்களெனத் தாம் நம்புவதாகவும் இதனால், எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக இருக்குமென்று  எதிர்பார்ப்பதாக அவர்  என்னிடம் தெரிவித்தார்.

மேலும், தம்முடன் சேர்ந்து வடமாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்துவதற்கும் அதில் பங்குபற்றுவதற்கும் ஆளுநர் விருப்பம் தெரிவித்தாகவும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறினர்.

இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங்களையும் பார்க்க மக்களுக்கான அன்றாடத் தேவைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமென்பதைப் பற்றி நாங்கள் (வடக்கு மாகாணசபை) கூடிய அக்கறையுடன் உள்ளோம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவ்வாறானதொரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

மேலும், இவ்வாறாகச் சேர்ந்து செயற்பட வேண்டிய சூழல் ஏற்படும்போது நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்று ஐ.நா. பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு, அதில் எந்தவித தயக்கமும் இல்லையெனக் கூறினேன்.

ஆனாலும், எங்களுக்கு முக்கிய தேவையாகவிருப்பது மக்களுடைய நலன் மட்டுமே. மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே  எமது நோக்கம் என்றும் தெரிவித்தேன்.

அரசாங்கம் சில நடவடிக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றது. எங்களை அவற்றிலிருந்து தவிர்க்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருகின்றமையை நான் காண்கிறேன். இந்தச் சூழலிலிருந்து புதியதொரு சூழலுக்கு மாறினால் அதனை வரவேற்கின்றேன். இதன் மூலமே உண்மையான இணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும்  நான் கூறினேன்' என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .