2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காணமற்போனோர் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 04 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு, அரச தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் எதிர்வரும் ஏப்ரல்; 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ம.ஆனந்தராஜா இவ்வழக்கினை ஒத்திவைத்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஷ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோரினால் கடந்த 2009 ஆம் ஆண்டில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவிக்கையில்,

'2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ் வழக்கு 5 ஆவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அரச தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு சமூகமளிக்காவிட்டால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வேறொரு அரச சட்டத்தரணியை நியமிக்கமுடியும்.

இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி, விசாரணை அறிக்கையினை வவுனியா மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் வவுனியா மேல் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

அத்துடன், காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 7 மனுதாரர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். மேற்படி மனுதாரர்கள் திங்கட்கிழமை (04) முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு வந்த போது அவர்களின்; வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு இன்னும் மாற்றப்படவில்லையென மன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

இவ்வழக்கிற்கு  ஆதரவளிக்கும் வகையில் மன்றிற்கு வந்த 20 இற்கும் மேற்பட்ட பங்குதந்தையர்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததன் காரணமாக ஏமாற்றம் அடைந்து சென்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .