2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தீர்வுத்திட்டம் மக்களிடமிருந்து பெறப்படும்: த.தே.கூ

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் பிரேரணைகள் மூலமே சரியான தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட முடியும் என்ற கருத்திற்கமைய இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் குழுவினால், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.

அவ்வாறு தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டம் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறை செலுத்தும் நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் சுரேஸ் எம்.பி குறிப்பிட்டார்.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் பிரேரணைகள் மூலமே சரியான தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட முடியும் என்ற கருத்திற்கமைய இந்தத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை tnaproposal@gmail.com என்னும் முகவரிக்கோ அல்லது யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கோ அல்லது நீர்வேலி, பருத்தித்துறை வீதியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திற்கோ அனுப்பி வைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X