2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வடமராட்சிக் கிழக்கு அழிவடையும் தறுவாயில் உள்ளது: சுகிர்தன்

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


'வடமராட்சி கிழக்கில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வினால் அப்பிரதேசம் அழிவடையும் நிலையில் உள்ளது. மக்களின் நலனுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட இதில் அக்கறை இல்லாமல் இருப்பது மிக கவலையாகவுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எமது  கூட்டமைப்பு மக்கள் பிரநிதிகள் கூட்டங்களில் மட்டுமே கதைக்கிறார்கள். அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வடமராட்சியின் பல இடங்களுக்கு இங்கு இருந்துதான் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

இப்பகுதியில் கடல் மட்டத்துக்கு கீழாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதினால், நன்னீரானது உவர் நீராக மாற்றமடையும். அதேபேல் விவசாய நிலங்களும் பாதிப்படையும். கடல் பெருக்கு எடுக்கும் போது கடல் நீரானது கிராமங்களுக்குள் வந்தால் பின்னர் அது கடலுக்கு திரும்பி செல்ல முடியாது.

இதனால் கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயமும் தோன்றியுள்ளது. இது சம்மந்தமாக நான் மாகாண சபையில் தீர்மானம் ஒன்றை எமது சுற்று சூழல் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.  

அதனை முறியடிக்கும் முகமாக மகேஸ்வரி நிதியத்தினர் சில சூழ்சிகளை மேற்கொண்டார்கள். அதில் ஒன்று பருத்தித்துறை பிரதேச சபையிடம் அவர்களது பாதையினை பாவிப்பதற்காக வரி தருவதாகத் தெரிவித்துள்ளனர். 

அதற்கு பிரதேச சபையானது தலைமைப் பீடத்துடன் கலந்தாலோசிக்காமல் மகேஸ்வரி நிதியத்தின் சதி வலையில் விழுந்துள்ளார்கள். 

பருத்தித்துறை பிரதேச சபையின் தேர்தல் முடிவடைந்து  மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் இதுவரை மண் அகழ்வு தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மேலும்  பிரதேச சபையினால் பாதை பாவிப்பதற்காக வழங்கப்பட்ட  கடிதத்தினை பிரதேச சபையின் அனுமதி என்று அரசியல் செய்வது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இயலாத தன்மையாகும். கடந்த நான்கு வருடங்களாக பிரதேச சபைக்கு வரி செலுத்தாதவர்கள் தற்போது வரி செலுத்த உடன்படுகிறர்கள் என்றால் மகேஸ்வரி நிதியம் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. 

மக்களின் நலன்களில் அக்கறைப்படுவர்கள் என்று வெளிவேசம் போடும் ஈ.பி.டி.பி யினர் மிகவும் இரகசியமாக ஒரு பிரதேசத்தினையே தங்களின் பணத்தேவைக்காக அழித்து கொண்டு இருகின்றார்கள். 

இவர்கள் இதற்கான விலையினை தேர்தல் காலங்களில் உணருவார்கள் என்பது நிச்சயம். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் குடாநாட்டுக்கு தேவையான மண்ணினை வடமராட்சி கிழக்கில் திட்டமிட்டு, சரியான முறையில் மண் அகழ்வினை மேற்கொண்டார்கள்.

மேலும் அந்த பணத்தினை வடமராட்சி கிழக்கின் அபிவிருத்திக்கு செலவிட்டார்கள். ஆனால் மகேஸ்வரி நிதியத்தினர் தினமும் பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்கின்றார்களே தவிர வடமாரட்சி கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்தியும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை பருத்தித்துறை - மருதங்கேணி வீதி மிகவும் மோசமாக காணப்படுகின்றது. இவ்வீதி சீரின்மையால் பல விபத்துகள் இடம்பெறுகின்றன. இதனை எவருமே கவனிக்கவில்லை. நான் மாகாண சபை உறுப்பினர் என்பதற்கு அப்பால் வடமராட்சி கிழக்கு கிராமத்தவன் என்ற அடிப்படையில் எனது உயிரினை கொடுத்தாவது இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வேன்.

ஏனெனில் கடந்த காலங்களில் மண் அகழ்வினை எதிர்த்தவர்கள் ஆயுதமுனையில் இனந்தெரியாதவர்களால் அச்சுறுத்தப்பட்டர்கள். எனது நண்பன் கேதிஸ்தரன் சுட்டு கொல்லப்பட்டான். 

மேலும் மணல் விடயம் சம்பந்தமாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின், கவனத்துக்கு சரியான ஆதாரத்துடன் மக்களின் கையொப்பத்துடன் தெரியபடுத்தவுள்ளேன்.   

மேலும் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தன்னிசையான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து மக்கள் நலன்  சார்ந்த முடிவுகளையே எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அது வரலாற்று தவறாக மாறும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X