2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒருவர் வெட்டிக்கொலை; ஆறாவது நபருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து இளைஞர் ஒருவர் இம்மாதம் 5ஆம் திகதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், தொடர்புபட்ட ஆறாவது சந்தேகநபரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்நசேகரம் இன்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

மீசாலை கிழக்கினைச் சேர்ந்த 23 வயதுடைய 6 ஆவது சந்தேகநபரை நேற்று வியாழக்கிழமை (17) கைது செய்த சாவகச்சேரி பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

மேற்படி கொலைச் சம்பவத்துடன், தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே மீசாலையினைச் சேர்ந்த ஐவர் விளக்கமறியலில் (22ஆம் திகதி வரையில்) வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மீசாலையில் ஆலயத்திருவிழாவொன்றில் கடந்த சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின் எதிரொலியாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கொலைச் சம்பவத்திற்கும் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, உயிரிழந்த அன்பழகனின், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து, சயந்தனின் உருவப் பொம்மையினை கடந்த செவ்வாய்க்கிழமை (15) மாலை புத்தூர் வீதிச் சந்தியில் வைத்து எரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .