2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள், உயிருள்ள நினைவாலயம்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 27 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வரணியில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமக்காக போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம்.

விடுதலைப்புலிகளோ அல்லது வேறு போராளிகளோ இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாக தெரியலாம்.

ஆனால், அவர்கள் எங்களின் இரத்த உறவுகள். எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்த தியாக சீலர்களுக்கு, மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடாது என்பதில் இராணுவம் மிகக்கவனமாக இருக்கிறது.

நினைவு நடுகற்களை அழிப்பதன் மூலமோ, நினைவுதின நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிடமுடியாது என்பதை அரசாங்கமோ, இராணுவமோ புரிந்துகொள்வதாக தெரியவில்லை.

நாங்கள் நடுகின்ற மரங்கள் வெறும் மரங்கள் அல்ல. மரங்களை தெய்வமாக வழிபட்ட மரபை கொண்டவர்கள் நாங்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இந்து ஆலயங்களில் தல விருட்சங்கள் காணப்படுகின்றன. அதுமட்டும் அல்லாது, சங்க இலக்கியங்களில் தமிழர்கள் மரங்களை உறவினர்களாக போற்றியதாக பதிவுகள் உள்ளன.

எனவே மரம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் உணர்வுபூர்வமாக கலந்துவிட்ட ஒன்று. எனவே அந்த மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் எமது உணர்வுகளுக்கு வடிகால் தேடுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாத்து கொள்ளமுடிகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், வே.சிவயோகன், ச.சுகிர்தன், சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் சி.துரைராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .