2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நந்திக்கடலில் சட்டவிரோத மீன்பிடி கட்டுப்படுத்தப்படும்

Sudharshini   / 2015 மே 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு நந்திக்கடலில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை (18) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நந்திக்கடலில் அண்மைக்காலமாக சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்த முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை போதிய நடவடிக்கை எடுக்காமை குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (19) முல்லைத்தீவில் நடத்தப்படவுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுமா என மாவட்டச் செயலாளரிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காத தருணம் பார்த்து சட்டவிரோத மீன்பிடியாளர்கள் சட்டவிரோதமான முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை மாவட்டச் செயலகத்துக்குள்ளது.

இது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முல்லைத்தீவு பொலிஸாரின் உதவி நாடப்பட்டு அவர்களுடன் இணைந்து சட்டவிரோத முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

நந்திக்கடலில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல். குழை போட்டு கணவாய் பிடித்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .