2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அச்சத்துடன் வாழ்கிறோம்: நாகவிகாராதிபதி

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

'யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இந்நிலைமையை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்ட வேண்டும்' என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைப்பின் தலைமை வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் 61 பௌத்த மற்றும் சிவில் அமைப்புகள், திங்கட்கிழமையன்று (03) கைகோர்த்தன.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே நாகவாகாரையின் விகாராதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வசித்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.

ஈழம் முத்திரையிடப்பட்ட மேடையில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். விஜயகலா மகேஸ்வரனும் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை எல்லாம் அகற்றுவதாக விஜயகலா கூறினார்' என்றார்.

'கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலிருந்து நயினாதீவுக்கு வரும் யாத்திரிகர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்படுகின்றன. நாம் மிகவும் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளது.

இவ்வாறான பாரிய விடயங்கள் யாழ்ப்பாணத்தில் நடக்கின்றன. அச்சத்தின் மத்தியில் வாழும் நிலைமையை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க சிங்களவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட்17ஆம் திகதி வாக்களிக்க வேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

யாத்திரிகர்கள் தாக்கப்படவில்லை

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சின்னையா சிவராசா, நயினாதீவு நாகவிகாரைக்கு சுற்றுலா சென்ற சிங்கள யாத்திரிகர்கள் எவரும் தாக்கப்படவில்லை எனவும் அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை எனவும் கூறினார்.  

வேலணைப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நயினாதீவுப் பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதா? என அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த மாதம் வரை, அதாவது நான் தவிசாளராக இருக்கும் வரையில் அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. சிங்கள யாத்திரிகர்கள் எவரும் தாக்கப்படவும் இல்லை. யாத்திரிகர்கள் பாதுகாப்பான முறையில் நாகவிகாரைக்குச் சென்று வருகின்றனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .