2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணாமற்போனோரை விடுவிப்பதாக பதிவு: யாழில் பதற்றம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரை எதிரரும் 24ஆம் திகதி விடுவிப்பதாகக் கூறி தென்னிலங்கையை மையப்படுத்திய கட்சியொன்று, கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயரில் பதிவுகளை மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியால் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், இன்று செவ்வாய்க்கிழமை (04) பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், காணாமற்போனோர் தொடர்பிலான பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விவரங்களுடன் அந்த விருந்தினர் விடுதிக்கு வருமாறு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையை மையப்படுத்திய கட்சியொன்று திங்கட்கிழமை (03) அறிவித்திருந்தது.

இவ்வறிவிப்பை நம்பி, மேற்படி விருந்தினர் விடுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்ற காணாமற்போனோரிடம் உரையாற்றியுள்ள பெண்ணொருவர், காணாமற்போனோரை பதிவு செய்வதாகவும் அவ்வாறு காணாமற்போனவர்களின் கணிசமானவர்களை எதிர்வரும் 24ஆம் திகதியன்று விடுவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவ்விடத்துக்குச் சென்ற மக்கள் இயக்கத் தலைவர் வி.சாகதேவன், இந்தப் பதிவு யாரால் மேற்கொள்ளப்படுகின்றது என அப்பெண்ணிடம் வினவியுள்ளார். அதற்கு அப்பெண், கிழக்கு மாகாண முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கமையவே இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

உடனடியாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு சாகதேவன் அழைப்பை ஏற்படுத்த முயன்ற போது அதனைத் தடுத்துள்ள அப்பெண், 'அவ்வாறு இல்லை, இது வேறுவிதமாக பதிவு செய்யப்படுகின்றது' என முரண்பாடான தகவலைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பதிவை மேற்கொண்ட பெண்ணை, சகாதேவன் புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை புகைப்படம் எடுத்தமைக்காக குறித்த பெண் சகாதேவனைத் தாக்கியுள்ளார். இதனால் குழப்பமடைந்த காணாமற்போனோரின் உறவினர்கள், குறித்த பெண்ணை சுற்றிவளைத்து நியாயம் கேட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணையும் சகாதேவனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் தன்னை மேற்படி பெண் தாக்கியதாக சகாதேவன் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இதேவேளை, காக்ணமற்போனோர் சங்கத்தின் தலைவியொருவரும், 'தனது பெயரை தனது அனுமதியில்லாமல் பதிவு தொடர்பான விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி மற்றுமொரு முறைப்பாட்டையும் செய்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்ற காணாமற்போனோரின் உறவினர்கள், தங்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும், அந்தப் பெண்ணைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தினர். இதனால், பொலிஸ் நிலையப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .