2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணாமற்போனோரின் உறவினர்களை நான் அழைக்கவில்லை: அங்கஜன்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரின் உறவினர்களை யாழிலுள்ள விருந்தினர் விடுதிக்கு வருமாறு தான் அழைக்கவில்லை எனவும் அவ்வாறு தனது பெயரில் பத்திரிகைகளில் போடப்பட்ட விளம்பரத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பில் எனக் குறிப்பிட்டு, காணாமற்போனோரின் உறவினர்களை செவ்வாய்க்கிழமை (04) யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் பதிவு செய்ய வருமாறு திங்கட்கிழமை (03) பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டது.

இதனை நம்பிய காணாமற்போனோரின் உறவினர்கள், குறித்த விருந்தினர் விடுதிக்கு பதிவுகளை செய்யச் சென்றபோது, பதிவுகளை மேற்கொண்ட பெண்ணொருவர் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவர் வே.சகாதேவனைத் தாக்கியுள்ளார்.

பதிவுகளை மேற்கொண்ட பெண், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதியச் சொன்னதாகவும் பின்னர் முன்னுக்கு பின்னான கருத்துக்களை முன்வைத்திருந்தார். பெண்ணையும் சகாதேவனையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, காணாமற்போனோரின் உறவினர்களும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர். தங்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மக்கள் கூறினர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அங்கஜன் அங்கு உரையாற்றுகையில், 'எனக்கு இந்த விடயத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. எனது பெயரைப் பாவித்து காணாமற்போனோரை அழைத்துள்ளனர். காணாமற்போனோரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். நான் அவ்வாறு செய்வதில்லை. காணாமற்போனோரை வைத்து அரசியல் செய்வதென்றால் நான் எப்போதோ செய்திருப்பேன். அதற்கான அவசியம் எனக்கில்லை' என்றார்.

'காணாமற்போனவர்கள் கிடைப்பார்களா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் காணாமற்போனோரைப் பற்றிக் கதைப்பதற்கு எனது இல்லத்தில் வைத்து ஏற்பாடு செய்துகொடுத்தேன். காணாமற்போனோருக்கான விசேட செயலணியை உருவாக்கல், இரகசிய முகாம்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லல் ஆகிய பல உறுதிப்பாடுகள் இதன்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

இந்த விடயத்தை நான் எவ்விதத்திலும் விளம்பரப்படுத்தவில்லை. விளம்பர அழைப்பில் அரசியல் பின்னணியுள்ளதாக உணர்கின்றேன். காணாமற்போனோரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .