2025 ஜூன் 26, வியாழக்கிழமை

25 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

காலாவதியான பொருட்கள், சுட்டுத் துண்டு (லேபள்) இல்லாத பொருட்கள், நிறுவனத்தின் பெயர் இல்லாத பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சங்கானையிலுள்ள 25 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என சங்கானை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ரி.மோகனகுமார் இன்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் உணவு மருந்து கட்டப்பாட்டு திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக சங்கானை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள்;, மருத்துவ மாதுகள் இணைந்து சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வியாபார நிலையங்களில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டனர்.

சங்கானைப் பிரதேசத்திலிருந்த 60 வியாபார நிலையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (31) தொடக்கம் திங்கட்கிழமை வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் மேற்குறித்த குற்றச்சாட்டில் 25 வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டன என அவர் தெரிவித்தார்.

இந்த வர்த்தகர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன என அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் தமக்கு வேண்டிய பொருட்களை கடைகளில் கொள்வனவு செய்யும்போது உற்பத்தி திகதி, முடிவடையும் திகதி, உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயர், சுட்டுத்துண்டு (லேபள்) ஆகியன உரியமுறையில் உள்ளனவா என்பதை அவதானித்து வாங்கும் படியும் ரி.மோகனகுமார் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். சங்கானை சந்தையில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் தாங்கியிலிருந்து வரும் நீர் பொதுமக்களின் குடிநீர் பாவனைக்கு உகந்ததல்ல என சங்கானை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ரி.மோகனகுமார் தெரிவித்தார்.

சங்கானை சந்தையிலிருக்கும் நீர்த் தாங்கிக்கு நிரப்பப்படும் நீர் மலசலகூடத்திற்கு அண்மையிலுள்ள கிணறு ஒன்றின் மூலமே பெறப்படுவதினால் குடிநீருக்கு உகந்ததில்லை என வலி. மேற்கு பிரதேச சபையின் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் சபைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையிலுள்ள குழாய்கள் மூலம் வரும் நீரை பொதுமக்கள் பருக வேண்டாமென்றும் மற்றய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் படியும் அறிவித்தலினை பகிரங்கமாக சந்தையின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தும்படியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .