2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

3ஆவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்

Niroshini   / 2021 ஜூலை 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமாகாணத்தில், கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ், சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற சினோஃபோம் தடுப்பூசிகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டு இலட்சம், வவுனியா மாவட்டத்துக்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிக்கிடைக்கப் பெற்றுள்ளன என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில், இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இத்தடுப்பூசியானது 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஏற்கெனவே முதல் இரண்டுகட்டங்களிலும் 1 இலட்சம் பேருக்கு முதலாவது தடவைதடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது 3ஆம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். 

 

இதற்கமைய, இன்று (29) முதல் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர்,  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்துக்குரிய சுகாதாரவைத்திய அதிகாரியினால் வெளியிடப்படுமெனவும் கூறினார்.

'இத்தடுப்பூசியானது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

 

யாழ் மாவட்டத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு அவர்களது வதிவிடம் அமைந்துள்ள சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் வழங்கப்படும். இவர்கள் தமது ஆசிரிய பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

அத்துடன், முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசியானது, நாளை (30) முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் கூறினார்.

'தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமைஉடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். போதனாவைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதாரவைத்தியசாலைகளிலும் ஜுலை மாதம் 31ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

‘தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாதநிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி நோயளர்களின் விவரங்களை அவர்களை பராமரிப்பவர்கள் அப்பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரி பணிமனையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .