2025 ஜூன் 26, வியாழக்கிழமை

"மாம்பழத்தால் சிக்கிய பித்தளை திருடன்"

Kanagaraj   / 2014 ஜனவரி 28 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.நேசமணி


யாழ். சுழிபுரம் மேற்கு காளி கோயிலில் பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்ற இளைஞன் சறுக்கி வீழ்ந்ததினால் அவரை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் கிராமஅலுவலர் ஊடாக பொலிஸாரிடம் கையளித்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் மேற்படி ஆலயத்திற்குள் பட்டப்பகலில் புகுந்து அங்கிருந்த குத்துவிளக்குகள், அர்ச்சனைத் தட்டு, மணிகள், பஞ்சாராத்தி போன்ற பித்தளைப் பொருட்களைத் திருடி உரைப்பை ஒன்றினுள் போட்டுக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றான்.

இதன்போது, ஆலயத்தின் முன் வீதியில் கிடந்த மாம்பழம் ஒன்றின் மீது திருடனின் துவிச்சக்கர வண்டி சக்கரம் ஏறியதால் துவிச்சக்கர வண்டியுடன் திருடன் சறுக்கி வீழ்ந்தான். இதன்போது திருடி உரை பையினுள் கட்டப்பட்ட பொருட்களும் வீதியில் வீழ்ந்து பலத்த சத்தம் எழுப்பின.
சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து பார்த்த போதே குறித்த இளைஞன் ஆலயப் பொருட்களைத் திருடிச் சென்றமை தெரியவந்தது. உடனடியாக திருடனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மின்சாரக் கம்பத்தின் தாங்குக் கம்பியுடன் கட்டிவைத்ததுடன், அப்பகுதி கிராமஅலுவலரின் ஊடாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அவ்விடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றதுடன், திருடப்பட்ட பொருட்கள் மற்றும் திருடனின் துவிச்சக்கர வண்டி ஆகியவற்றினையும் உடன் கொண்டு சென்றதாக பொலிஸர் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .