2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அண்ணன் வந்துவிட்டார்; தம்பி வரவில்லை

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடற்புலியாகவிருந்த அண்ணன் புனர்வாழ்வு பெற்று தற்போது குடும்பமாக வாழ்கின்றார். ஆனால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு கடற்புலிகளில் இணைக்கப்பட்ட தம்பி இன்னமும் திரும்பவில்லை என தாயார் ஒருவர் தெரிவித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றது. இதில் சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'நாங்கள் வலைஞர் மடத்தில் இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு கடற்புலிகள் எனது மகன் அன்டனி துசாந்த்தை (அப்போது வயது 18) பிடித்துச் சென்றனர். எனது மூத்த மகன் லோகதாஸ் கடற்புலியில் ஏற்கனவே இருந்தார். தனது தம்பியை கடந்த 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கண்ட அண்ணன், தம்பியை வீடு செல்லக்கூறியதுடன், வீட்டுக்கு வந்து தம்பி வந்துவிடுவான் என்றும் கூறிச் சென்றார். மகன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தபோதும் அவன் வரவில்லை.

2009 ஆம் ஆண்டு புனர்வாழ்வு முகாம் ஒன்றில் நடைபெற்ற நத்தார் கொண்டாட நிகழ்வு தொடர்பில் வெளியான படத்தில் எனது இளைய மகனின் புகைப்படம் இருந்தது. அது தொடர்பில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடினோம். முகாம் பொறுப்பதிகாரியுடன் கதைத்த போது, இந்தப் படங்கள் எவ்வாறு கிடைத்தது? எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தினரே தவிர எனது மகன் பற்றி எதுவும் கூறவில்லை.

கடற்புலிகளில் இருந்த மூத்த மகன் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து திருமணம் செய்த குடும்பமாக வாழ்கின்றார். ஆனால்,எனது இளைய மகன் இன்னமும் கிடைக்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X