2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’அனைவரும் பொறுப்போடு ஒருமித்துச் செயற்படவும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

எதிர்கால ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டிய மிக முக்கிய கால கட்டத்தில் அனைவரும் பொறுப்போடு ஒருமித்துச் செயற்பட வேண்டுமென, தமிழ் மக்கள் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் ஐம்பத்தி இரண்டாயிரம் (52,000) வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்  கொள்வதிலும் யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புகள், வடக்கு - கிழக்கில் பௌத்த - சிங்கள மயமாக்கல், தமிழ் மக்களின் தொன்மைகளை அழிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளத் தவறிய காரணத்தால் இவற்றையும் வினைத்திறனுடன் கையாளக் கூடிய புதிய தலைமை தேவை என்கிற கருத்துகடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வந்தது. 

“இதன் விளைவாகவே, இவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கான ஒரு மாற்றுத் தலைமையாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உதயமானது. நாம் எதிர்பார்த்த அனைவரும் இக்கூட்டணியில் இணைவதில் ஒத்துழைக்காவிட்டாலும், மேற்கண்ட பிரச்சினைகளை ஈடுபாட்டுடனும் வினைத்திறனுடனும் செயற்படுத்தக் கூடியவர்கள் என்போரை எம்மால் இயன்றவரை இணைத்து உருவாக்கினோம்” எனவும், சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டணி உருவாகி ஆறு மாதங்களே ஆனபோதும், நடுவில் ஏறத்தாள மூன்று மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இக்கட்சி மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளப்பட அவகாசம் கிடைக்கவில்லையெனத் தெரிவித்துள்ள அவர், எனவே, மிக குறுகிய காலத்துக்குள்ளேயே எமது கட்சியின் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் தமது கட்சியின் சின்னத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டி இருந்ததெனவும் கூறியுள்ளார். 

“நாமும் எமது எதிர்காலசந்ததியும், இந்த நாட்டில் எமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்கு தொடர்ந்தும் நாம் போராட வேண்டியுள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல. மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புகளைச் செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும். 

“எனவே, தமிழ்த் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுகின்றனர். 

“இதன் ஒரு முக்கிய வடிவமாக, எமது மக்கள் மத்தியில் இருக்கும் தமது ஒரு சில முகவர்களையும் அரசாங்கத்தைச் சார்ந்து தம்மை வளர்த்துக் கொள்ள முனையும் சிலரையும் பதவிகள் அதிகாரங்களைக் கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றனர். 

“இவர்களுடைய இந்தச் சதித் தனங்களைப் புரிந்துகொள்ளாத எமது மக்களின் ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான ஒரு விடயமாகும். ஏறத்தாள 45 ஆண்டுகளுக்குப் பின்னால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, யாழ். மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளதுடன், அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு - கிழக்கில் பல ஆசனங்களைப் பெற்றுள்ளன. தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது” எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

“இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுடன் அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது  நாம் எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதுடன் எமது போராட்டத்தை வலிமையுடன் சரியான திசைவழியில் எடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்” எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .