2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘அபிவிருத்தி தொடர்பில் பேசும் போது, அரசியல் பற்றியும் பேசவேண்டியுள்ளது’

Editorial   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிலையான அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுக்கான நிலையான, முழுமையான அரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும் வரை அபிவிருத்திப்பற்றிப் பேசும்போது, அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நாம் உரத்துப்பேசவேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம்” என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒருபுறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும் கடுமையாக விமர்;சித்து வருகிறார்கள். ஆனால், இன்னொரு புறம் வடக்கின் வெகுமக்களோ முதமைச்சரைக் கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் எவருக்கும் அடிபணியாமல், எதற்கும் சோரம் போகமல், இனத்தின் குரலாக ஒலிப்பதாலேயே இவ்வளவு விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டுக்கொண்டிருப்பவர். அதேசமயம் அபிவிருத்தியின் பெயரால் எமது இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமாதிகட்டும் அரசின் முயற்சிகளுக்கு அவர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதனால்தான் அவர் அபிவிருத்திக்குத் தடையாக உள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார்.

உள்ளுராட்சி சபைத்தேர்தலின் போது அபிவிருத்தி பற்றி மட்டும் பேசினால் போதும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று சில தரப்பினர் கூறி வருகிறார்கள். இனப்பிரச்சினை காரணமாகவே எமது பிரதேசங்களின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது. எனவே எமது பிரதேசங்களில் நிலையான அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுக்கான நிலையான, முழுமையான அரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும் வரை அபிவிருத்திப்பற்றிப் பேசும்போது அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நாம் உரத்துப்பேசவேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .