2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உப பொலிஸ் பரிசோதகருக்கு கடும் எச்சரிக்கை

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், ஹொரோய்ன் போதைப்பொருள் வியாபாரத்தில் வியாபாரியைக் கைது செய்யத் தவறிய போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு, யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்று  (21) கடும் எச்சரிக்கை விடுத்தார்.  

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கொழும்பில் இருந்து வந்திருந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸார், யாழ். நகரை அண்டிய பகுதியில், ஹொரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்தனர்.  

இவ்வாறு கைதுசெய்யபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சந்தேகநபர்களான இரு இளைஞர்களும், “எமக்கு போதைப்பொருள் பாவிக்கும் பழக்கம் உண்டு. நாம் வழமையாக அதனை போதைப்பொருள் வியாபாரியிடமிருந்தே பெற்றுக்கொள்வோம். அன்றைய தினம் போதைப்பொருள் வாங்க வருமாறு எம்மை அந்த வியாபாரி தொலைபேசி ஊடாக அழைத்தார். நாம் அங்கு சென்று அதனைப் பெற்றுக்கொண்ட வேளை அருகில் இருந்த பொலிஸார், எம்மைக் கைதுசெய்தனர். ஆனால், போதைப்பொருள் வியாபாரியைக் கைதுசெய்யாமல் விட்டுவிட்டனர்” என, தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் தெரிவித்தனர்.  

அதனைத் தொடர்ந்து, மேற்படி இளைஞர்களைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகரை மன்றுக்கு அழைத்த நீதவான், கடுமையாக எச்சரித்ததுடன், உடனடியாக குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார். 

  இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (21) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், போதைப்பொருள் வியாபாரியை நீதிமன்றில் முற்படுத்தவில்லை.  

அதேவேளை, போதைப்பொருள் வியாபாரி எனச் சந்தேகிக்கப்படும் யாழ். சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் வசி என்ற நபர், நேற்றுமுன்தினம் (21) காலையில் நீதிமன்றுக்கு வந்து, வழக்கு விசாரணைகளைப் பார்வையிட்டார் என, நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்த நீதவான், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பணிப்புரை விடுத்தார்.  

மேலும், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதவான், அதுவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X