2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள்

Editorial   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-              டி.விஜிதா

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், இம்முறை 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில்  இன்று (01) நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்திரிகர்களும், இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 500 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவு ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதேபோன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசலகூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பஸ் சேவை அதிகாலை 4 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை நடைபெறும். அதேபோன்று படகுச்சேவைகள் குறிகட்டுவனில் இருந்து கச்சதீவுவரை காலை 5 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

 

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. பயணிகள்பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும்.

ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். திருப்பலி நிறைவடைந்த பின்னர், அந்த பகுதியில் சூழல் மாசடைவதால் பக்தர்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .