2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்கள் எரியூட்டல் ; இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

எம். றொசாந்த்   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில், சடலங்களை எரியூட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி வரை நீடித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், நேற்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புத்தூர் - கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு, மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதேவேளை, குறித்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஒரு பகுதியினர் மல்லாகம் நீதிமன்றை நாடியிருந்தனர். 

 

அந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், மயானத்தை சூழ 10 அடி உயர மதிலைக் கட்டி, சடலங்களை எரியூட்டுமாறும் ஒரு வருட காலத்துக்குள் மின்தகன மயானமாக அதனை மாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, மல்லாகம் நீதிவான் மன்றின் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து, மயானத்தை சூழவுள்ள மக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, மயானத்தை சூழவுள்ள மக்களும் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

மனுவை விசாரணை செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி, “அந்த மயானத்தை அனுமதிப்பதா, நிரந்தரமாக அகற்றுவதா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கே உள்ளது.

அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க மன்று பணிக்கிறது. இந்த வழக்கு முடிவுறும் வரை கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை எரியூட்ட தடை விதிக்கப்படும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், “யாழ். மாவட்டச் செயலாளருடைய பங்களிப்புகள் இதில் எவ்வாறு உள்ளன. அவரால் வழங்கப்படக்கூடிய தகவல்கள் தொடர்பாகவும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தார்.

மன்றின் உத்தரவுக்கு அமைய யாழ். மாவட்ட செயலாளர் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று (11) இடம்பெற்றது.

இதன்போது,  மனுவின் இடைபுகு மனுதாரராக மற்றொரு தரப்பும் ஆவணங்களை இணைத்து, தம்மையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

இதையடுத்து, இடைபுகு மனுதாரரை இணைப்பது தொடர்பான மனுதாரரின் ஆட்சேபணையை முன்வைப்பதற்கு, எதிர்வரும் பெப்ரெவரி 21ஆம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கிய, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அன்றைய தினம் வரை வழக்கு விசாணையையும் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதித்து மல்லாகம் நீதிவான் மன்றம் வழங்கிய கட்டளை மீதான இடைக்காலத் தடையும், பெப்ரவரி 21ஆம் திகதி வரை மேல் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .