2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘சம்பந்தனும், சுமந்திரனும் துரோகிகள்’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

“சிங்கக் கொடியை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம் எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள்தான், அந்த சிங்கக் கொடியை கையிலே தூக்கிப் பிடித்தவாறு அதனை ஆதரிக்கிறோம் என்கின்றனர்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வதிரியில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பண்டா செல்வா ஒப்பந்தத்தையும் டட்லி செல்வா ஒப்பந்தத்தையும் சிங்களவர்கள் கிழித்து எறியவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் அரசியலைச் செய்துவரும் சுமந்திரன், அந்த இரு ஒப்பந்தங்களும் சமஸ்டி தீர்வினை வலியுறுத்திய ஒப்பந்தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்ததாகவும் மட்டக்களப்பு உப்புவெளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது. அவர் வாய் திறந்தால் கூறுவது முழுக்க பச்சைப் பொய். முதலில் அவர் சரித்திரத்தைப் படித்துவிட்டு வரவும். மாபெரும் தலைவர் தந்தை செல்வநாயகம் ஐயாவே பண்டா செல்வா ஒப்பந்தமும் ட்டலி செல்வா ஒப்பந்தமும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான ஆரம்பப் படி என்றுதான் கூறியிருக்கிறார். எங்களுடைய இலக்கு சமஷ்டி இந்த ஒப்பந்தங்கள் அதற்கான ஆரம்பப் படி என்றுதானே கூறியிருக்கிறார். ஆனால் இந்தச் சுமந்திரன் அவை யாவற்றையும் திரிவுபடுத்தி சிங்களங்கவர்களைக் காப்பாறும் நோக்கில்  அவை சமஷ்டி என பொய்யுரைக்கிறார்.

“இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்திலேயே இலங்கையின் இறைமை மக்களுக்குரியாதாய் இருப்பதோடு பாராதீனப்படுத்த முடியாததும் பிரிக்கப்பட முடியாததுமாக இருத்தல் வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருக்க அதனை மக்கள் வாசிக்க மாட்டார்கள். வாசித்தலும் சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை புரிந்துகொள்ள முடியாது என்ற துணிவில், ஒற்றையாட்சியான இந்த இடைக்கால அறிக்கையை சமஷ்டி அரசியல் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருபவர்தான் இந்தச் சுமந்திரன்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்பது என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டுவரவேண்டும் என்றும், இல்லை என்றால் சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்கள் தமிழரசாக பிரிந்து செல்ல பிரித்தானிய அரசாங்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் முதல் முதலாக கோரிக்கை வைத்தவர்களே காங்கிரஸ் கட்சிதான்.

அவ்வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு ரெலிக்கிறாம் அனுப்பிவிட்டு கப்பலிலே பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட, டி.எஸ்.சேனநாயக்க இங்கிருந்த ஏனைய தலைவர்களை அரவணைத்து ஜீ.ஜீ மட்டுமே அந்தக் கோரிக்கையை வைக்கிறார். ஏனைய தலைவர்கள் அதற்கு இணங்கவில்லை எனக் கூறி, ஒற்றையாட்சிக்குள் இங்குள்ளவர்களை இணங்கவைக்கிறார். அதனடிப்படையில் தான் ஒற்றையாட்சி நிறைவேற்றப்பட்டது. இதுதான் வரலாறு.

சிங்கக் கொடியிலே தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் அடையாளம் இல்லாத நிலையில் அதனை ஏற்க மாட்டோம் எனக்கூறி அதனை எதிர்த்த தலைவரும் ஜீ.ஜீ பொன்னம்பலமே. அதன் பின்புதான் அந்தச் சிங்கக் கொடியிலே தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளமாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்பும் நாங்கள் அந்தக் கொடியை ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. கையிலே அதனை ஏந்தி கொண்டாடியதும் இல்லை.

தமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக அரசியல் செய்வதாக இருந்தால், சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் எனக் கூறவேண்டும்” என தெரிவித்தார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .