2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘செய்யக் கூடிய பலவற்றை செய்துள்ளோம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபை எதுவுமே செய்யவில்லை எனக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், மாகாண சபையின் அதிகாரத்துக்குட்பட்ட வகையில் செய்யக் கூடிய பலவற்றை மாகாண சபை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாகாண சபையின் செயற்பாடுகளால் மாகாணத்தின் கல்வித் துறை முன்னேற்றமடைந்து வருவதாகவும் இதேபோன்று தொடர்ந்தும் மாகாணக் கல்வி வளர்ச்சியடைவதற்கு சகல தரப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருமித்து செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபை தொடர்பில் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றதுன. ஆனால், மாகாண சபை முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. மாகாண சபையானது எதுவுமே செய்யவில்லை எனக் கூறுவது தவறானது.

“குறிப்பாக மாகாணக் கல்வி வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த போதிலும் தற்போது பல முன்னேற்றங்களைக் கண்டு வளர்ச்சியடைந்தே வருகின்றது. அதாவது கா.பொ.த சாதாரண தரம், உயர் தரம், புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாகாணத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

“இவற்றைப் பார்க்கின்ற போது ஏனைய மாகாணங்களில் கல்வி வளர்ச்சியிலும் பார்க்க எமது மாகாணத்தில் கல்வி வளர்ச்சியடைந்தே வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

“அதிலும் குறிப்பாக கல்வி, விளையாட்டில் தேசிய, சர்வதேச, ஆசிய, தெற்காசிய ரீதியில் மாணவர்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இதற்கமைய மாகாணத்தில் கல்வியை முன்னேற்றுவதற்கு நாங்கள் பல நடவடிக்கைகைள முன்னெடுத்து வருகின்றோம்.

“அதே நேரம் இங்கு பல தேவைகளும் இருக்கின்றன. அவற்றையும் நிறைவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கின்றது. குறிப்பாக கணித விஞ்ஞான துறையில் மாணவர்கள் கல்வியை தொடர்வது குறைவாக இருக்கின்றது.

“இங்கு கலை மற்றும், வர்த்தக துறைகளிலேயே 80 சதவீதமான மாணவர்கள் கல்வியை தொடர்கின்றனர். அதனால் 20 சதவீதமான மாணவர்களே கணித, விஞ்ஞான துறைகளில் கல்வியை தொடர்கின்றனர்.

“இதனால், கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையும் இருக்கின்றது. அதே போன்று வடக்கு மாகாணத்துக்கு வைத்தியர் சேவைக்கு விண்ணப்பிக்கப்படுகின்ற போது வெளிமாவட்டங்கள் அல்லது மாகாணங்களில் இருந்தே பலரும் வருகின்ற நிலை உள்ளது.

“இதே வேளை கடந்த காலங்களில் இங்கிருந்தே வேறு இடங்களுக்குச் சென்று வைத்தியர்கள் சேவையாற்றியிருக்கின்ற போதிலும் தற்பொது இங்கு சேவையாற்றுவதற்கே வைத்தியர்கள் போதாத நிலையே காணப்படுகிறது.

“அதே போன்று மாணவர்களின் பாடத் தெரிவுகளினாலும் வெறு இடங்களைச் சேர்ந்த மாணவர்களே இங்குள்ள பல்கலைக்கழகங்களையும் ஆக்கிரமிக்கின்றனர்.

“இதற்கு பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதும் ஒரு காரணமாக இருக்கின்றது. இதற்குப் பல காணரங்கள் இருந்தாலும் இதனால் பாதிப்புக்கள் எமது மாகாணத்திற்கே ஏற்படுகின்றன. குறிப்பாக வடக்கு மகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் வகுப்புக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களில் ஆயிரம் மாணவர்கள் குறைவாக உள்ளனர். இதே போன்று தான் ஏனைய வலயங்களிலும் இருக்கலாம்.

“ஆகவே எமது மாகாணத்தின் கல்வி வளர்ச்சி உட்பட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆகவே, இதனை உணர்ந்து அனைவரும் செயறப்பட முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X