2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பங்களிப்பு உள்ளது’

Editorial   / 2018 ஜனவரி 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

‘தீவகப் பகுதிக்கான வைத்தியர்களை நியமிப்பதில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளதென்பதனை மறந்துவிட வேண்டாம். வடமாகாண சபை மீதும், அமைச்சர்கள் மீதும் குறை கூறுவதை விடுத்து வடமாகாண சபையின் செயற்பாட்டுக்கு பங்களிப்பு தருமாறு’ வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் அண்மையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் மாணவியொருவர் உயிரிழந்தார்.

புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையே குறித்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், மாணவியின் உயிரிழப்புக்கு வடமாகாண சபை பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா கருத்துவெளியிட்டிருந்தார்.

கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“வடமாகாணத்தில் வைத்தியர்களையும் வைத்திய நிபுணர்களையும் நியமிப்பதுக்கு மத்திய அரசுடன் போராட்டத்தை நடாத்தி வருகின்றோம்.

தீவுப்பகுதிக்கான வைத்திய வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோரும்போது, விண்ணப்பங்கள் அதிகளவு கிடைப்பதில்லை.

மாகாணசபை உறுப்பினர்களுக்கு உள்ள பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் என கூறிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றஉறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள், எம்மைக் குறை கூறுவதை விடுத்து அந்த வெற்றிடங்களை நிரப்புவதுக்கு மத்தியில் எதைப் பேசினீர்கள் என்று மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வேண்டுமென்றே, வடமாகாண சபை மீதும், வடமாகாண சபை அமைச்சர்கள் மீதும், நிர்வாகம் மீதும் அபிவிருத்தி விடயங்கள் மீதும் கருத்துக் கூறுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்பதனை யோசித்து நாங்கள் செய்யும் சேவைகளுக்கு பங்களிப்புச் செய்வதே உபகாரமாக இருக்கும். தவிர, இவ்வாறான துன்பகரமான செய்திகளை வைத்து பத்திரிகைகளில் அறிக்கை விடுவது, மக்களை ஒரு போதும் உங்களுடன் இணைக்காது. மருத்துவம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென” அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .